districts

நெல் கொள்முதல் செய்ய லஞ்சம்: மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்

விழுப்புரம், ஏப். 29- அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் பெற்றதாக மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட வளத்தி பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு அரசு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது. இங்கு அப்பகுதியை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் நெல்லை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு நெல் மூட்டைகளை எடை போடுவதற்கு மூட்டைக்கு ரூ. 100 லஞ்சமாக பெறுவதாகவும், அதைக் கொடுக்காத விவசாயிகளின் நெல் மூட்டைகளை ஏதாவது ஒரு காரணம் கூறி திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறி கடந்த 26ஆம் தேதி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்திய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் நெல் கொள்முதல் விற்பனையாளர் துரைமுருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.