மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சென்னையில் தேசிய சுகாதார இயக்கம் ஏற்பாடு செய்திருந்த 'ஆரோக்கிய இந்தியா, உடல்நல இந்தியா' என்பதை வலியுறுத்தும் சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் பேரணியில் பங்கேற்ற அமைச்சர் தாமும் சைக்கிள் ஓட்டினார். இந்தப் பேரணி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, கடற்கரை சாலை, சுவாமி சிவானந்தா சாலை வழியாக மன்றோ சிலையை அடைந்து, பின்னர் அங்கிருந்து மீண்டும் விருந்தினர் மாளிகையை வந்தடைந்தது. இதில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் செந்தில்குமார், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரித் தலைவர் டாக்டர் ஜெயந்தி, மத்திய, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.