districts

செயின் பறிப்பில் ஈடுபட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது

சென்னை, ஏப். 11- சென்னை ஓட்டேரியில் காவலர் மனைவி யிடம் வழிப்பறி செய்த சம்பவத்தில் அரியானாவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஓட்டேரி காவலர் குடியிருப்பு எம் பிளாக்  பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு.  இவர் சென்னை பெருநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார். சுரேஷ்பாபுவின் மனைவி சுபாஷினி (38), கடந்த 7ஆம் தேதி ஓட்டேரி ஸ்டீபன்சன்  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சுபாஷினி அணிந்திருந்த 4 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து ஓட்டேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வட மாநிலத்தை சேர்ந்த 3 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டத் தொடங்கினர். இதில் 3 பேரும் பெரியமேடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில்  அறை எடுத்து தங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பின்தொடர்ந்த  காவல்துறையினர் ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே காலனி அருகே  அவர்களை பிடிக்க முயன்றனர். காவலர்களை  பார்த்தவுடன் 3 பேரும் தப்பியோடினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் 3 பேரின் கையும் உடைந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். விசாரணையில் 3 பேரும் அரியானா  மாநிலத்தை சேர்ந்த சச்சின் குமார் (24) அங்கித் (20), அங்கித் யாதவ் (26) என்பது  தெரியவந்தது சச்சின் குமாரும், அங்கித்தும்  நேரடியாக வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.  அங்கித் யாதவ், இருவருக்கும் உதவியாக இருந்துள்ளார். அரியானா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்து, இங்கு ஒரு ஓட்டலில் தங்கியிருந்து வழிப்பறியில் ஈடுபடுவதை 3 பேரும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். அவர்களிடமிருந்து 7 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், 3 பேரும் கடந்த 9ஆம் தேதி பெரம்பூரைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் 3 சவரன் செயின் பறித்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.