districts

img

தொடர் கொலை சம்பவம்: குண்டர் சட்டத்தில் 5 பேர் சிறையிலடைப்பு

வண்டலூர்,டிச.24-  சென்னையை அடுத்த நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில் தைலாவரத்தை சேர்ந்தவர் கோபால கண்ணன் (வயது23). இவரை கடந்த தீபாவளி பண்டிகையன்று  இரவு கூடுவாஞ்சேரியில் வைத்து ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது.  அதில் தொடர்புடைய குற்றவாளிகளான கன்னி யப்பன் என்ற குடுமி லோகேஷ் (28), ஸ்ரீ ரங்கராஜன் என்ற தங்கம், இளங்கோ என்ற புலி (25) ஆகிய 3 பேரையும் கூடுவாஞ்சேரி காவல்நிலைய தனிப்படை போலீசார் கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்ற சிறையில் அடைத்தனர். அதேபோன்று காரணை புதுச்சேரி அண்ணாநகர் பகுதியில் கடந்த மாதம் 14-ந்தேதி தனுஷ் என்ற 17 வயது சிறுவனை ஒரு கும்பல் ஓட ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த தனசேகர் (29), வினோத் என்ற கரி வினோத் (27) ஆகிய இருவரையும் கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.  இந்த 2 இடங்களில் நடைபெற்ற கொலை வழக்குகளில் தொடர்புடைய 5 பேரையும் வெளியில் விட்டால் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, 5 பேரும் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 5 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.