அம்பத்தூர், மே 4- ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என அத்தியாவசிய பொருட்கள் கடத்திய 240 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். ரேஷன் கடைகளில் மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை உள்பட பல்வேறு உணவு பொருட்களை ஒரு சிலர் விலை கொடுத்து வாங்கி, அவற்றை மூட்டைகளாக சேகரித்து, ஆந்திர உள்பட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ரயில், பேருந்து உட்பட பல்வேறு வாகனங்களில் கடத்தி சென்று, அதிக விலைக்கு விற்பனை செய்யும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை தடுக்க தமிழ்நாடு அரசின் குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். அம்பத்தூரில் இயங்கி வரும் சென்னை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட அம்பத்தூர், கொரட்டூர், பெரம்பூர், எண்ணூர், கொருக்குப் பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் ஆய்வாளர் ஹேமலதா தலைமையில் காவல் துறையினர் ரயில் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் இறுதி வரை அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தொடர்பாக 206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 70 டன் ரேஷன் அரிசி, 360 லிட்டர் மண்ணெண்ணெய், 36 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், 540 கிலோ கோதுமை, துவரம் பருப்பு, லாரியில் கடத்தப்பட்ட 2 லட்சத்து 34 ஆயிரம் லிட்டர் ஆயில் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கடத்தில் ஈடுபட்ட 121 ஆண்கள், 119 பெண்கள் என மொத்தம் 240 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரேஷன் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், டேங்கர் லாரியில் ஆயில்களை திருடி விற்பது, மானிய எரிவாயு சிலிண்டர்களை கள்ளச் சந்தை யில் விற்பது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் 1800 599 5950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட நபர்க ளின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்று குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் தெரிவித்தனர்.