districts

img

கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்முகத் தேர்வு ரத்து - விண்ணப்பதாரர்கள் போராட்டம்

கோவையில் இன்று நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், விண்ணப்பதாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் வேலைக்கு டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் நேர்முகத்தேர்வு நடைபெறும் என்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதனால் தேர்வானது ரத்து செய்யப்பட்டது. 

இதனால் இன்று நடைபெற இருந்த நேர்முக தேர்வானது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அப்பள்ளியில் அறிக்கை ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நேர்காணலுக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேர்காணலுக்கு வந்தவர்கள் ஆவேசமடைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது ,

கடந்த 3 ஆண்டுகளாக இது போன்று ஏதாவது ஒரு காரணம் காட்டி நேர்முகத் தேர்வானது ஒத்திவைக்கப்பட்டு வருவதாகவும், தற்பொழுது ஒட்டப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் அடுத்த நேர்முகத்தேர்வு என்றைக்கு நடத்தப்படும் என்று தேதி குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இது போன்று ஒவ்வொரு வருடமும் ஒத்தி வைக்கப்படுவதால் வயது வரம்பு தாண்டி செல்வதாகவும் இதனால் வேலை வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் அவர்கள் கூறினர். 

எனவே அதிகாரிகள் உடனடியாக அடுத்த நேர்முகத் தேர்விற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் அப்போது யாரேனும் புதிதாக விண்ணப்பித்திருந்தால் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர். 
அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

இதனால் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக அப்பகுதி பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

;