கோவையில் குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முயன்ற தொழிற்சங்க அமைப்புகளை போலீசார் தடுத்தி நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒன்றிய பாஜக அரசு தொழிலாளர் விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், எம்எல்எப் ஆகிய தொழிற்சங்க அமைப்புகள் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தொழிலாளர்களின் வேலை, ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு உரிமைகளை நான்கு சட்ட தொகுப்புகள் பறிப்பதாகவும் அதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களை கைவிட வேண்டும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்க மறுக்கிறது எனவே தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து புதிய குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முற்பட்ட பொழுது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான ஏற்பட்டது.
முன்னதாக தேசிய கொடி ஏற்றப்பட்டு அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.