districts

img

பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து ரகளை; பாஜக நிர்வாகி ஒருவர் கைது - 10 பேர் மீது வழக்கு

கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டுவோம் என ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையை அடுத்துள்ள பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்திற்குள் வெள்ளியன்று புகுந்த பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலான பாஜகவினர், அலுவலகத்திற்குள் மோடியின் படத்தை மாட்ட முயற்சித்தனர்.

இதனைப் பார்த்த பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் அனுமதியின்றி அலுவலகத்திற்கு வந்து புகைப்படம் மாற்றுவது தவறு எனவும், மாஸ்க் அணியாமல் அலுவலகத்திற்குள் வரக்கூடாது எனவும் சுட்டிக்காட்டினர். இதனை ஏற்காத பாஜகவினர் அலுவலக ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், மோடியின் புகைப்படத்தை கழற்றினால் அதற்கு திமுக தான் காரணம் எனவும், புகைப்படத்தை கழற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மிரட்டியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

இந்நிலையில், பாஜக நிர்வாகி பாஸ்கரன் மீது, அத்துமீறி நுழைதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாஜகவினர் 10 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.