பொள்ளாச்சியை அடுத்த நல்லூத்துக்குளி தொடக்கப்பள்ளியில் பயிலும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை சாதி ரீதியாக அடித்து துன்புறுத்திய ஆதிக்க சாதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த நல்லூத்துகுளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், அப்பகுதியில் வசித்து வரும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 50 குடும்பத்தினரின் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரம் பள்ளிக்கு விவசாய தோட்டங்களின் வழியே நடந்து சென்று வருகின்றனர். இதற்கிடையே, அப்பகுதியைச் ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், பள்ளிக்கு செல்லும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகளை துன்புறுத்துவது, சாதி பெயரை கூறி இழிவுபடுத்துவது, கல்லால் அடிப்பது, தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற தீண்டதகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சனியன்று பள்ளிக்கு சென்ற அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவனை ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கியதில், அச்சிறுவன் படுகாயமடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த சிறுவனின் பெற்றோர், ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவனின் பெற்றோரான ராதாகிருஷ்ணன், மனைவி கிருத்திகா, மாமனார் ராமராஜன் ஆகியோரிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் சாதியை கூறி இழிவுபடுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இப்பிரச்சனை குறித்து பள்ளி தலைமையாசிரியர், ஊராட்சி தலைவர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இப்பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாக்குழு உறுப்பினர் கே.மகாலிங்கம் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இம்மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர், உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார். முன்னதாக, இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா பொறுப்பாளர் ஸ்டாலின் பழனிச்சாமி, விவசாயத் தொழிலாளர்கள் சங்க பொறுப்பாளர் பட்டீஸ்வரமூர்த்தி மற்றும் ஆதிக்க சாதியினரால் பாதிக்கப்பட்ட அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் பலர் உடனிருந்தனர்.