நமது தலையைப் பொதுவான பேச்சு வழக்கில் மண்டை என்பார்கள். மண்டையில அடிபட்டிருச்சு, மண்டையப் பொளந்துருவேன், மண்டையிலேயே போட்ருவேன் என்று சொல்லும் வழக்கம் இயல்பாக உள்ளது. ஒருவர் இறந்து விட்டால் கூட மண்டையப் போட்டுட்டாரு என்று சொல்வார்கள். நிறைய அறிவுள்ளவர் என்று ஒருவரைச் சொல்வதற்கு அந்தாளு செம மண்டைக்காரன் என்பார்கள், அவனுக்கு மண்டையெல்லாம் மூளை என்பார்கள்.
அப்படியெனில் மண்டை என்றால் நமக்குத் தலை என்கிற பொருள் இயல்பாக வருகிறது. ஆனால் சங்க காலத்தில், மண்டை என்றால் வேறொரு பொருள் நிலவி வந்துள்ளது. மண்டை என்பது சங்கக்கால இரவலர்கள் உணவு பெற்று உண்பதற்காக வைத்திருந்த ஓர் உணவுப் பாத்திரம் ஆகும். மன்ன ரது அரண்மைக்குச் சென்ற இவர்கள், மன்னனைப் புகழந்து பாடி முடித்த பின்பு அரசர்கள் கொடுக்கும் கள், சோறு போன்ற உணவுகளை இம்மண்டையில் பெற்று உண்டுள்ள னர். அரண்மனைக்காரர்களும் அம் மண்டையில்தான் உணவுகளை வழங்கியுள்ளனர். இம்மண்டை இரவ லர்களின் உண்கலமாக இருந்துள்ளது எனப் புறநானூற்றுச் செய்யுட்கள் கூறியுள்ளன. புறநானூறு 103 ஆம் பாடலில் “கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரென” என்னும் அடியிலும் “பொழு திடைப் படாஅப் புலரா மண்டை” என்ற ஔவையின் அடியிலும் மண்டை என்பது உண்கலம் என்ற பொருளில் வருகிறது. விறலியை ஆற்றுப் படுத்திய ஒளவையார், ‘கவிழ்ந்து கிடக்கும் உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்? என ஏங்கிக் காட்டில் இருந்த சில்வளை விறலியே!, சேய்மைக்கண்ணன்றி அண்மையிலேயே நெடுமானஞ்சி உள்ளான். அவன்பால் செல்வை யாயின், அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருட்களை, ஒரு பொழுதும் ஈரம் பார்க்காத மண்டை நிரம்ப ஊன் கொடுப்பதில் வல்லவன். அவனை நாடிச் செல்க’ எனக் கூறியுள்ளார். அதுபோலவே புறம் 179 ஆம் பாட லிலும் “என் இரவல் மண்டை” என்ற பொருளில் மண்டை உண்கலமாகவே குறிப்பிடப்படுகின்றது. புறம் 115 இல் “பாணர் மண்டை” என்ற சொல் கள்ளுண்ணும், கள் வழங்கும் கலமாக மண்டை விளங்கியதைக் குறிப்பிடுகிறது. புறம் 352 இல் “தேஎங் கொண்ட வெண்மண்டையான்” எனப் பாணர் வைத்திருந்த மண்டை பற்றிக் குறிப்பிடப்படுகிறது. மண்டை என்ற சொல், மண்+உருண்டை என்பதிலிருந்து தோற்றங் கொண்டிருக்கலாம். மண் உருண்டை, மண்ணுருண்டை, மண்டை என வழக்கில் சொற்குறுக்க மாகிய சொல்லாகியிருக்கலாம். அது தலை என்கிற வடிவத்தோடு ஒப்புமை காணப்படும் போது, தலைக்கும் மண்டை என்கிற சொல் வழக்கு உரு வாகியிருக்கலாம். சோளக் காட்டுப் பொம்மைக்குக் கூட தலைக்கு மண் சட்டியைக் கவிழ்த்து அதில் மனித முகத்தை வரைந்து வைப்பது வழக்கி லுள்ளது. வெல்ல உருண்டையைக் கூட வெல்ல மண்டை, மண்டை வெல்லம் என்று சொல்லும் வழக்கமுள்ளது. அது போலவே ஆதிகால மனிதர்கள், உண்கலமாக மண்டை ஓடுகளைப் பயன்படுத்தியதற்கான தரவுகள் உள்ளன. சிவபெருமாள் கையில் ஏந்திய கலயம் கூட மண்டை ஓடுதான். அந்த வகையில் மண்டை ஓடு, மண்ணால் செய்யப்பட்ட ஓட்டுச் சட்டிக்கும் பொதுப் பெயராக வழக்காகியிருக்கலாம். மண்டை, தலை போன்றவற்றின் பொது உருவ ஒப்புமையாக உருண்டை வடிவம் உள்ளது. இவ்வா றாக மண்டைக்குள் புகுந்து பார்த்தால், மண்டைக்குள் நிறைய உருண்டைகள் ஓட ஆரம்பிக்கின்றன.