districts

img

வெறிச்சோடி காணப்படும் ஒகேனக்கல் சுற்றுலா தளம்

தருமபுரி, ஜூன் 25- பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல் சுற்றுலா தளம் வெறிச்சோடி காணப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக ஒகேனக்கல் இருந்து வருகிறது. இங்கு விடுமுறை தினங்களில் மக்கள் கூட்டம் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக, உள் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அணிவகுத்து வருவது வழக்கம். அதுமட்டுமல்லாது தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து, தர்ப்பணம் வழங்குவதற்கும் புண்ணிய நதியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றை கருதுவதால் இதற்காகவும் தினந்தோறும் அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நாள்தோறும் மக்கள் கூட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நிரம்பி வழிந்தது. வாகனங்களை நிறுத்த முடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்கள் அனைத்தும் அணிவகுந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது அந்த நிலை மாறி, ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டவுடன் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டவரின் வருகை முற்றிலும் குறைந்தது. இதனால் இரண்டு மாதங்களாக சுற்றுலா பயணிகளால் களைகட்டி இருந்த ஒகேனக்கல் பகுதி, தற்போது மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. எண்ணிவிடக்கூடிய அளவில் வந்த பொதுமக்கள் மட்டும், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலா தளங்களும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், சாலையோர வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.