கோவை சம்பவம் குறித்து எழுத்தாளர் இரா. முருகவேல் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த வேண்டும் என்று நாகரிகமாக, மெல்லிய நகைச்சுவையுடன் கோரிக்கை வைத்தார். பின்பு அவர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து தன் சுய விருப்பத்தின் அடிப்படையில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
ஆனால், நிதியமைச்சர், ‘மன்னிப்பு எல்லாம் அவசியமில்லை. சிரமம் புரிகிறது. முடிந்ததை செய்கிறோம்’ என்று சொல்லி இருந்தால் சரியாக இருந்து இருக்கும்.
எல்லாவற்றையும் பர்சனல் ஆக எடுத்துக் கொண்டால் கருத்துக் கேட்பு கூட்டம் எதற்கு? இதற்கு முன் இதே கோவையில் நிதியமைச்சரின் கூட்டத்தில் ‘கடன் கிடைப்பதில்லை’ என்று ஒருவர் நேரடியாக கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு முன் கோவை கொடிசியா அரங்கில் நடந்த ராகுல் காந்தி கூட்டத்தில் ஒரு தொழிலதிபர் மிக விரிவாக கோவை தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துரைத்தார். அதுவும் பரவலாக பகிரப்பட்டது. எனவே, கோவை தொழில் முனைவோர் கூட்டங்களில் இதெல்லாம் வழக்கம்தான். கூட்டங்களே அதற்குத்தான் நடத்தப்படுகின்றன. அரசும் எதிர்க்கட்சிகளும் கோவை தொழிலதிபர்கள் ஆதரவை பெற முயல்கின்றன. ஆனால் நிதியமைச்சர் இது ஒரு கலந்துரையாடலாக மாறுவதை விரும்பவில்லை போலிருக்கிறது.
மீண்டும் அம்பலமான கூட்டுக்களவாணி முதலாளித்துவம்
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் வைத்த கோரிக்கையை விட அவர் கேட்ட மன்னிப்பு அதிக பாதிப்பை அரசுக்கு ஏற்படுத்தும். பாஜக அரசு முன்வைக்க விரும்பும் தொழிலதிபர்களுக்கு ஆதரவான, நட்பும் புரிதலும் கொண்ட ‘நவ முதலாளித்துவ அரசு’ என்ற இமேஜ் அடிவாங்கப் போகிறது.
தாராளவாத முதலாளித்துவம் என்பதற்கு பதில் குரோனி கேபிடலிசம் (கூட்டுக்களவாணி முதலாளித்துவம்) என்பதே மீண்டும் நிரூபணம் ஆகிறது. கொங்கு நாட்டில் துகில் பள்ளத்தாக்கு முதலாளிகளை நெருக்கமாக்கிக் கொள்ள பாஜக செய்யும் முயற்சி ‘சாண் ஏற முழம் சறுக்குகிறது.’” என பதிவிட்டுள்ளார்.