கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் அத்துமீறல்களை கண்டித்தும், ஈஷா மையம் மீதான புகார்கள் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் கோவையில் இன்று இந்திய மாதர் தேசிய சம்மேளத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு அருகில் மிகப் பிரம்மாண்டமான அளவில் நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு உலகளாவிய அளவில் பக்தர்கள் உள்ளனர்.
அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் மீது ஆரம்ப காலம் தொட்டே பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருந்து வருகிறது. வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருப்பது. மலைவாழ் பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை தன்மையப் படுத்திக் கொண்டது. யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து பிரம்மாண்டமான கட்டிடங்களை எழுப்பி உள்ளது. ஆசிரமத்திற்குள்ளே தன்னார்வ தொண்டர்கள் என்ற அடிப்படையில் சிலரை கட்டாயப்படுத்தி பணியில் அமர்த்தி இருப்பது. உள்ளே தங்கி உள்ள பெண்களுக்கு மொட்டை அடித்து தனி ஆடை வழங்கி உள்ளேயே வைத்திருப்பது. ஆசிரமத்திற்கு உள்ளேயே எரிமேடை அமைத்திருப்பது. யோகா பயிற்சிக்கு வருகிற பயிற்சியாளர்கள் வழங்குகிற கட்டணத்தை நன்கொடை என்ற பெயரில் வரவு வைத்து வருமான வரி துறையை ஏமாற்றுவது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இந்த நிறுவனத்தின் மீது உள்ளது.
இருந்தாலும் இந்த நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கின்ற அதிகாரிகள் முழுமையாக விசாரிக்காமல் விசாரணைகளை கிடப்பில் போடுகிற மர்மம் இன்னும் விளங்காமல் இருக்கிறது. உயர் நீதிமன்றமே தலைவிட்டாலும் முழுமையான விசாரணை நடைபெறுவதில்லை.
இந்த நிலையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் ஈஷா மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிக்க வேண்டும். ஈஷாவிற்குள் நடைபெறும் மர்ம மரணங்களை விசாரணைக்கு உட்படுத்தபட வேண்டும். கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ள ஆசிரமவாசிகளை விடுவிக்க வேண்டும். சட்ட விரோத நடவடிக்கைகள் அனைத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை கோவை டாட்டா பாத் பவர் ஹவுஸ் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தேசிய செயலாளர் பி.பத்மாவதி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். மாதர் சமேளனத்தின் மாநிலச் செயலாளர் மு. கண்ணகி, மாநில தலைவர் ஜி. மஞ்சுளா, கோவை மாநகராட்சி மாமன்ற குழு தலைவர் கே.சாந்தி, கோவை மாவட்ட தலைவர் ஜே.கலா, மாவட்ட செயலாளர் எம்.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் நா.பெரியசாமி, மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் வாகனங்களில் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.