டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்காமல் துறை அமைச்சர் அலுவலக பரிந்துறையின் பேரில் நடப்பதாகவும், இதில் பண முறைகேடு நடப்பதாக சிஐடியு டாஸ்மாக் சங்க பொதுச்செயலாளர் திருச்செல்வம் குற்றம் சாட்டினார்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணியிடமாறுதல்களில் சுழற்சி முறையை அமுலாக்க வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல்களை இரத்து செய்ய வேண்டும். மதுக்கூடங்களை மூட வேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணிவரன்முறை காலமுறை ஊதியம் உள்ளிட்ட சட்டப்படியான உரிமைகளை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார்.
இதில் டாஸ்மாக் ஊழியர் சங்க சம்மேளன பொதுச்செயலாளர் திருச்செல்வன் பங்கேற்று போராட்டத்தின் அவசியம் குறித்து உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு டாஸ்மாக் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ஜான் அந்தோணி ராஜ் பொருளாளர், ராமகிருஷ்ணன் மற்றும் செந்தில் பிரபு, தங்கராஜ், விஜயராகவன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக டாஸ்மாக் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் திருச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்ற கூடிய ஊழியர்களுக்கு சொந்த ஊர்களுக்கு பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தி வருகிறது.
கடந்த ஆட்சியில் கோரிக்கை நிறைவேற்றாத நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புதிதாக வந்துள்ள அமைச்சர் முறையான பணியிட மாற்றம் செய்யாமல் தன்னிச்சையாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பணியிட மாறுதல் வழங்கியிருக்கிறார்.
இந்த பணியிட மாற்றத்தில் பணம் கைமாறி உள்ளது, பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது என நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். குறிப்பாக ஊழியர்கள் குடும்ப சூழல், உடல்நலம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பணியிட மாற்றத்துக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால் இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்காமல் தன்னிச்சையாக பணியிட மாற்றம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு முறைகேடாக செய்யப்பட்ட பணியிட மாறுதல்களை இரத்து செய்ய வேண்டும். அதேபோல் சுழற்சி முறையிலான பணியிட மாற்றங்களை அமல்படுத்த வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்டுள்ள பணி மாறுதல்களை உடனடியாக ரத்து செய்து நியாயமான கோரிக்கை அடிப்படையில் பணி மாறுதல்களை ஏற்படுத்த வேண்டும். புதிய அரசு அமைந்தவுடன் குறிப்பாக தற்போதைய துறை சார்ந்த அமைச்சர் எங்களது கோரிக்கைகளை ஏற்கவில்லை, மதுக்கூடங்கள் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என அமைச்சர் கூறும் நிலையில், பார் உரிமையாளர்கள் அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
டாஸ்மாக் நிறுவனத்தில் அமைச்சரின் தலையீடு அதிகமாக இருக்கிறது. இதை தமிழக முதலமைச்சர் அனுமதிக்கக் கூடாது. இதேபோன்று ஆளுங்கட்சியின் தலையீடு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என ஆளுங்கட்சியினர் நிர்பந்தம் செய்து டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.
இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். இதேபோன்று மது கூட உரிமையாளர்கள் டாஸ்மாக் கடை நேரத்திற்குப் பிறகு பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி கள்ளச் சந்தையில் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனை உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இந்த ஆட்சி மாற்றத்தால் டாஸ்மாக் ஊழியர்களின் பணி வரன்முறை காலமுறை ஊதியம் உள்ளிட்ட எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்த்தோம் ஆனால் எதுவும் நடைபெறவில்லை.
மதுக்கூடங்களை மூடவேண்டும் சட்டத்தில் இதற்கு இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதனை அமல்படுத்துவதற்கு மாறாக தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகம் மேல்முறையீடு செய்து இருப்பதை ஏற்க முடியாது. மதுக்கூடங்கள் இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு, குடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற அக்கறை இந்த அரசிற்கு இருந்தால் மதுக்கூடங்களை அகற்ற வேண்டும். மதுக்கடைகளையும் முழுமையாக மூட வேண்டும் என்பதே சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் நிலைப்பாடு, அதேநேரத்தில் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று பணிகள் வழங்கிட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் இதர சங்கங்களை இணைத்து தீவிரமான போராட்டத்தை சிஐடியு டாஸ்மாக் சங்கம் முன்னெடுக்கும் என்றார்.