உதகை, செப்.13- சிகரெட் புகைப்பதை கண்டித்த பள்ளி ஆசிரியரை பீர் பாட்டிலால் குத்திய படுகொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி - காந்தல் கே.கே.தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவர் ஊட்டியில் உள்ள உள்ள பிரிக்ஸ் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சொந்தமாக கால்நடைகள் வளர்த்து வந்த பிரகாஷ், கடந்த 2017ஆம் விடுமுறை தினத்தில் காந்தல் பகுதியில், தனது பசு மாட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் காந்தல் குருசடி காலனியை சேர்ந்த குதிரை பராமரிப்பாளர்களான லோகேஷ் (25), டிவைன் (25) ஆகிய இரு இளைஞர்கள் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தனர். இதனை பிரகாஷ் சிகரெட் புகைக்க வேண்டாம் என அவர்களுக்கு அறிவுரை கூறி கண்டித்தார். அப்போது இளைஞர்களுக்கும், பிரகாசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராக மாறியது. இதில் ஆத்திரமடைந்த லோகேஷ் அருகில் கிடந்த பீர் பாட்டிலை உடைத்து பிரகாசின் கழுத்தில் குத்தினார். இதில் பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஊட்டி மேற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து லோகேஷ் மற்றும் டிவைன் இருவரையும் கைது செய்தனர். இதன் பின்னர் அவர்கள் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியில் வந்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு செவ்வாயன்று கூறப்பட்டது. இதில் முதல் குற்றவாளியான லோகேசுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் இரண்டாவது குற்றவாளியான டிவைன் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.