கோவை, ஏப்.22- பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி கோவையில் ஜேசிபி வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி கட்டணத்தை குறைக்க வேண்டும். உதிரிபாகங்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.21 முதல் ஏப்.23 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் ஜேசிபி உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கோயமுத்தூர் எர்த் மூவர்ஸ் சங்க தலைவர் சந்திரசேகர் கூறுகையில், ஏற்கனவே கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டு, வாங்கிய வங்கிக்கடனை செலுத்த முடியாத நிலையில் தவித்து வருகிறோம். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் கோவை மாவட்டத்தில் 1,500 ஜேசிபி இயந்திரங்கள் இயங்கவில்லை. இதனால் 2 ஆயிரத்து 500 தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலம், கட்டிடம் மற்றும் விவசாயம் தொடர்பான வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.