districts

img

கருப்பு ஆடையை கண்டால் அலறும் ஆளுநர் ஆர்.என்.ரவி

கோவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்வில், கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களை போலீசார் வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு கருப்பு ஆடையை கண்டால் அலர்ஜி ஏற்படுகிறதா என மாணவர்கள் போலீசாரோடு விவாதத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் போலீசார் திணறிய சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் குடிமையியல் பணி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்வு சனியன்று நடைபெற்றது. இதில், குடிமையியல் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

ஆளுநர் வருகையினை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில், கல்லூரியில் நிகழ்வு நடைபெறும் அரங்கிற்கு கருப்பு உடையில் வந்த மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், காவல் துறையினருடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மட்டும் அனுமதிக்கபட்டனர். கருப்பு உடை அணிந்த மாணவ, மாணவியர் அரங்கிற்குள் அனுமதிக்க மறுத்த போலீசார் அவர்களை வேறு உடை அணிந்து வரும்படி கூறி திருப்பி அனுப்பினர். இதனால், மாணவர்கள் போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கருப்பு ஆடையை கண்டால் ஆளுநருக்கு பயமா அல்லது உங்களுக்கு பயமா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் சொல்ல முடியாத போலீசார் எப்படியாவது மாணவர்களை திருப்பி அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்.

முன்னதா,க கலந்துரையாடல் நிகழ்வினை தனித்தனி அறைகளில் மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. போதுமான அளவில் அறைகள் ஒதுக்கப்படாத நிலையில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கின் வாயில் முன்பாக நீண்டநேரம் கால்கடுக்க நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், முன்னறிவிப்பு ஏதுமின்றி ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆளுநர் ரவி கருப்பு உடை கண்டு ஏன் அஞ்சுகிறார். இது மாணவர்களுக்கான நிகழ்ச்சியா அல்லது உடைக்கான நிகழ்ச்சியா? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்னறிவிப்பாக தெரிவிக்காமல் நிகழ்ச்சிக்கு வந்த பின்பு மாணவர்களை கலந்து கொள்ள விடாமல் திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது. ஐயப்ப பக்தர்கள் கருப்பு உடைவுடன் நிகழ்ச்சிக்கு வந்தால் திருப்பி அனுப்புவார்களா? ஆளுநர் நிகழ்ச்சிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் அவர் கருப்பு சட்டைக்கு அஞ்சுவது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.