districts

img

உழைப்பவர் உரிமை காக்க உத்வேகத்துடன் முன்னேறுவோம்!

ஈரோடு, நவ.30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட மாநாடு அந்தியூரில், சனியன்று எழுச்சியுடன் தொடங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட 13ஆவது மாநாடு அந்தியூரில் அமைக்கப்பட்ட தோழர் என்.சங்கரய்யா நுழைவு வாயிலில் (நவ.30) சனியன்று எழுச்சியுடன் தொடங்கியது. முன்னதாக சத்தியமங்கலத்திலிருந்து மாவட்டக்குழு உறுப்பினர் கே.எம்.விஜயகுமார் தலைமையில் தோழர் சா.க.கண்ணப்பன் நினைவு கொடி மற்றும் தோழர் ஆர்.சத்தியமூர்த்தி நினைவு கொடி கயிறை மூத்த தலைவர் கே.துரைராஜ் பெற்றார்.  ஈரோடு தாலுகா கமிட்டியிலிருந்து எம்.பாலசுப்பிரமணி தலைமையில் தோழர் எம்.நாச்சிமுத்து நினைவாக எடுத்துவரப்பட்ட கொடி மரத்தை மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.முத்துசாமி பெற்றார். தோழர் பி.சரவணன், தோழர் எம்.என்.காளியண்ணன், ஏ.எம்.செல்வம் ஆகியோர் நினைவாக எடுத்துவரப்பட்ட ஜோதிகளை மூத்த தலைவர் கே.ஆர்.திருத்தணிகாசலம் பெற்றுக் கொண்டார். மாநாட்டு கொடியை எழுச்சி முழக்கங்களுக்கு மத்தியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.முனுசாமி ஏற்றி வைத்தார். இதனைத்தொடர்ந்து, தலைவர்கள், மாநாட்டு பிரநிதிகள் ஆகியோர் தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி செவ்வணக்கத்தை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து, தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கில் பொது மாநாடு தொடங்கியது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.

வரவேற்புக்குழு தலைவர் எஸ்.வி.மாரிமுத்து வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சுந்தரராஜன், பா.லலிதா மற்றும் டி.சாவித்திரி ஆகியோர் தலைமைக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி தொடக்கவுரையாற்றினார். மூத்த தோழர்கள் கே.ஆர்.திருத்தணிகாசலம், கே.துரைராஜ், டி.வி.மணி, சின்னையன், ஆர்.முருகேசன், கே.கண்ணுசாமி மற்றும் சி.அய்யாசாமி ஆகியோர் மாநாட்டில் கௌரவிக்கப்பட்டனர்.  பொது மாநாட்டையடுத்து நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் வேலையறிக்கை மற்றும் ஸ்தாபன அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் வி.அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானங்களை முன்மொழிந்தனர். ஞாயிறன்று இரண்டாவது நாள் மாநாட்டில், ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சியை கணக்கில் கொண்டும், தொழிலாளர்கள், விவசாயிகள் நலனை முன்னிருத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இதனையடுத்து புதிய மாவட்டக்குழு மற்றும் செயலாளர் தேர்வு நடைபெறுகிறது. இறுதியாக, ஆயிரக்கணக்கான செங்கொடி இயக்கத்தவர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது.