திருப்பூர், ஜூலை 21- பாஜகவைச் சேர்ந்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவர் குடிபோதை தலைக்கேறிய நிலையில், உடன் இருந்தவர்களால் தூக்கி செல்லப்படும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறுது. திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கடந்த ஜூலை 17 ஆம் தேதியன்று பல்லடம் ராயர்பாளையத்தில் பாஜவின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மாதப்பூர் பஞ்சாயத்து தலைவருமான அசோக்குமார் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் மாதப்பூரில் பணி புரியும் தூய்மை பணியாளர்களை அழைத்து வந்து அண்ணாமலையால் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கூட்டத்தை முடித்து கட்சி தொண்டர்களுடன் சென்ற மாதப்பூர் பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார் பொங்கலூர் அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் மது அருந்த சென்றுள்ளார். அங்கு மது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர் நடக்க முடியாமல் கிடந்தார். இதையடுத்து உணவருந்த நண்பர்கள் அழைத்த நிலையில், போதை தலைக்கேறிய நிலையில் எழுந்து செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவருடன் வந்த கட்சி தொண்டர்கள், நடக்க முடியாத அவரை தூக்கி சென்றனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. பஞ்சாயத்து தலைவரும், பாஜக நிர்வாகி மதுபோதையில் இருந்த தள்ளாடிய காட்சிகள் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.