districts

img

பவானி சாகர் அணைக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஈரோடு, ஆக.2- பவானி சாகர் அணையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையையொட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உள்ளது. அணை மேற்பகுதியில் உள்ள நீர்த்தேக்க பகுதியை பொது மக்கள் பார்வையிட ஆண்டு தோறும் ஆடி 18 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட வருவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு அணையின் பாது காப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (இன்று) பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் ஆடிப்பெருக்கு பண்டிகை நாளில் பவானி சாகர் பூங்கா வழக்கம் போல் திறந்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது, பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 84 அடியாக உள்ள நிலையில், பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டி உள்ளது. மேலும் அணை மேற்பகுதியில் உள்ள தேன் கூட்டில் தேனீக்கள் அதிகளவில் உள்ளன. எனவே, பாதுகாப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (இன்று) அணை மேற்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அணை மேல்பகுதியில் உள்ள நீர் தேக்கப் பகுதியை பொது மக்கள் பார்வையிட அனுமதி இல்லை. அதே சமயம், பவானிசாகர் அணை பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும் என்றனர். இதேபோல், செவ்வாயன்று பவானிசாகர் அணை மேற்பகுதியில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி அணை மேற்பகுதி வழியாக பூங்காவுக்குள் நுழைந்து வெளியே சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த யானை மீண்டும் நீர்த்தேக்க மேற்பகுதியில் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.