இப்படி ஒவ்வொரு அடுக்கிலும் உள்ளோர் சந்திக்கும் பிரச்சனைகள் வெவ்வேறு வகையானவை அனைத்துக்கும் ஒற்றைத் தீர்வை முன்மொழியவே முடியாது. இதனை ஓரளவு தமிழ்நாடு அரசு கொள்கை அறிக்கை உள்வாங்கி இருப்பதாகவே உள்ளது. குறிப்பாக முதியோருக்கான நோய்கள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை கவனம் செலுத்தி இருக்கிறது. அது சார்ந்து அறிக்கையில் நிறைய எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மூத்த குடிமக்களில் பெரும்பாலோருக்கு சர்க்கரை மற்றும் இரத்தக் கொதிப்பு உடல் கோளாறு உள்ளது. கொடுமை என்னவெனில் 34% மட்டுமே தங்களை சோதித்து முறையான மருந்து எடுத்துக் கொள்கின்றனர். தமிழ்நாட்டிலேயே இந்நிலை எனில் வட இந்தியாவில் கேட்கவேண்டுமா? தமிழ்நாட்டில் மூத்த குடிமக்களில் 9% மட்டுமே கொழுப்பின் அளவை சோதித்துள்ளனர். தமிழ்நாட்டில் 4.7 பேருக்கு நரம்பு சம்மந்தமான பிரச்சனைகள் உண்டு. 8% பேர் பர்கின்ஸ்சான் எனப்படும் பக்கவாதத்தால் முடங்கியுள்ளனர். இதையெல்லாம்விட கொடுமை 75% பேருக்கு லேசாகவோ கடுமையாகவோ ஞாபகமறதி நோய் உள்ளது. முதியோருக்கு இது பெரும் பிரச்சனை. என்றோ நடந்த தேவையில்லாதவை எல்லாம் நினைவில் இருக்கும். அதைப் பேசிக்கொண்டே இருப்பார்கள். தற்போ தைய தேவை/செய்தி/நிகழ்வு/தேதி/நாள்/பெயர் நினைவில் இருக்காது. இது கடுமையான பிரச்சனையே!
இந்த விவரங்களைத் தொகுத்து சொல்லும் தமிழ்நாடு அறிக்கை. சென்னை கிங் இன்ஸ்டியூட்டில் முதியோர் சிறப்பு மையம், மாவட்ட, வட்ட மருத்துவமனைகளில் சிறப்பு வசதி, முதியோரியல் துறை [geriatric department], எம்பிபிஎஸ் படிப்பில் முதியோரியல் பாடம், முதியோருக்கான தனி கியூ என பரிந்துரைகள் சிறப்பாகத்தான் இருக்கின்றன. ஆயின் அவை நடைமுறைக்கு எப்போது வரும்? அறிக்கையின் உணர்வு மருத்துவர்கள் ஊழியர்கள் உணர்வாக எப்போது மாற்றப்படும்? இவையே பெருங்கேள்வி. தேர்தல் வாக்குறுதி போல் ஆகிவிடக்கூடாதே! பல், கண், காது போன்ற முதியோர் அனைவரையும் கிட்டத்தட்ட பாதிக்கும் பிரச்சனைகளுக்கு மருத்துவக் காப்பீடு மறுக்கப்படுவது சரியா? காது கேட்கும் திறன் மிகமிக வீழ்ந்தாலும் தரமான காதுகேட்கும் கருவி மருத்துவக் காப்பீட்டில் கிடையாது. இதனை அரசு பரிசீலிக்குமா? தமிழ்நாட்டில் அரசு ஊழியர் அல்லது முறையான ஓய்வூதியம் பெறுவோர் மொத்த முதியோரில்8% மட்டுமே. அப்படியெனில் சுமார் தோராயமாக எட்டு லட்சம் பேர் மட்டுமே. இ.பி.எப் போன்ற ஒப்புக்கு ஓய்வூதியம் பெறுவோர் 14% அதாவது தோராயமாக 14 லட்சம் பேர்; அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியம் பெற விண்ணப்பித்தோர் 30% கிடைத்தோர் 16% அதாவது 30 லட்சம் பேர் கேட்டால் 16 லட்சம் பேருக்கு கிடைத்திருக்கிறது. கேட்டவரிலேயே 14 லட்சம் பேருக்கு நிர்வாக காரணங்களால் மறுக்கப்பட்டி ருக்கிறது அல்லது இழுத்தடிக்கப்படுகிறது .
இன்னும் 40% முதல் 50% பேர் சுமார் 40 லட்சம் முதல் 50 லட்சம் பேர் வரை இந்த வரையறை எதிலும் வராமல் வாழ்வோடு அன்றாடம் மல்லுக்கட்டுவோர் என்பது தெளிவு. அரசு இவர்களுக்கு என்ன செய்யப் போகிறது. நிரந்தர முகவரி இல்லை, ரேஷன் கார்டு இல்லை அரசின் திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை, போக்கிடம் இல்லை, வழிகாட்டுவோர் இல்லை. இவர்களை நோக்கி அரசு சென்றாக வேண்டும். இதில் சமூக அக்கறைமிக்க பொது இயக்கங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. 60, 70, 80 என வயதுக்கு ஏற்ப உதவித்தொகை, தனித்திருக்கும் பெண்களுக்கு அதிக உதவித்தொகை, ஒருங்கிணைந்த அடையாள அட்டை. ரேசன் அட்டையில் கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் முதியோரை பிரித்து தனி ரேஷன் அட்டை, முகவரி அற்றோருக்கான ஏற்பாடு என பலவற்றை அரசின் கொள்கைக் குறிப்பு பேசுகிறது. பேச்சோடு நிற்காமல் செயலாக்கம் பெறுவது எக்காலமோ? கர்நாடக மாநிலத்தில் முதியோருக்கு தனி அடையாள அட்டை [சீனியர் சிட்டிசன் கார்டு]உண்டு; இதன் மூலம் பஸ்ஸில் பயணச் சலுகை உண்டு. [நான் பெங்களூரில் இருப்பதால், வாங்கி வைத்துள்ளேன். பஸ் சலுகை அனுபவிக்கிறேன். ஆனால் பாஜக ஆட்சி வந்தபின் புதிய அடையாள அட்டை கொடுப்பது வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது]
தமிழ்நாடு அரசின் கொள்கை அறிக்கை ஒருங்கி ணைந்த அடையாள அட்டை பற்றி பேசுகிறது. அனைத்து முதியோருக்கும் தமிழ்நாட்டில் அடையாள அட்டை எப்போது ? படியேற முடியாத முதியவர்களுக்கான நடை மேடை எல்லா இடத்திலும் உண்டா? சாலையை நிதானமாகக் கடக்க வழிவகை உண்டா? தனிவரிசை உண்டா? குறிப்பாக மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், காவல் நிலையம், இங்கெல்லாம் முதியோருக்கு உரிய மரியாதையும் விரைந்த தீர்வும் எப்போது ? சாலையில் பொது இடத்தில் முதியோருக்கு கழிப்பிட வசதி மிக முக்கியப் பிரச்சனை அல்லவா? தினசரி சாலையில் நடைபயிற்சி செய்யும் போது இதனை எதிர்கொள்கிறேன். வெட்டவெளியில் சிறுநீர் கழிக்க வெட்கமாய் இருக்கிறது, ஆயின் சர்க்கரை நோயாளிக்கு வேறு வழி ? பெங்களூரிலேயே பூங்காக்கள் சுருங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் கேட்கவே வேண்டாம் . முதியோருக்கு பூங்கா வும் இருக்கைகளும் கழிப்பிட வசதியும் நடைபாதையும் அவசியத் தேவை அல்லவா? இப்போது ரயிலில் மோடி முதியோர் சலுகையைப் பறித்து ‘கருணை’ காட்டிவிட்டார் ? முதுமை என்பது எழுபது வயதுக்கு மேல்தான் என வித்தாரம் பேசுகிறார். சலுகைகளை மறுக்கி றார்கள். கள யதார்த்தம் புரிந்தும் வாய்வீச்சில் ஏமாற்றப் பார்க்கிறார். தமிழக அரசின் கொள்கை அறிக்கையும் முதுமை என்பதை எழுபது என்பதை போகிற போக்கில் சுட்டினாலும்; சலுகை, உரிமை என்பதை அறுபது வயதிலேயே பெற இப்போது தடை இல்லை.
கொஞ்சம் பொதுப் பிரச்சனைகளையும் ஒரு குறிப்பிட்ட வயதுவரை நீங்கள் சொல்வதை வீட்டிலுள்ளோர் கேட்டனர். காலம் முழுவதும் அப்படியே இருக்க முடியுமா? ஆகவே இசைந்து வாழ முதியோரும் பழகியாக வேண்டும். மாமியார் மருமகள் முரண்பாடு, அப்பா மகன் முரண்பாடு, சகோதர முரண்பாடு இப்படி எத்தனையோ முதியோர் மன உழைச்சலுக்கு காரணம் ஆகின்றன. அதுவும் பணம் இருக்கும் போது ஒரு விதம், இல்லாத போது இன்னொரு விதம். இது நம் பண்பாட்டின் இன்னொரு கூறும்கூட. இரு பக்கமும் உள்ள பார்வைப் பிழையே பிரச்சனையின் மூலம். சொத்து, சேமிப்பு இருந்தால் சொத்துச் சண்டை பகை, எதுவும் இல்லாவிட்டால் அதுவே தண்டனை. ஓய்வுக்கு பின் வீடே கதி என 24 மணி நேரமும் கிடக்கும் சூழலின் வெறுமையும் இறுக்கமும் ஒவ்வொரு முதியோருக்கும் இருக்கவே செய்யும். கனடாவிலிருந்து என் மகள் பேசினாள். அங்கே முதியோர்கள் குடும்பத்தோடோ அவர்கள் மட்டுமோ சுற்றுலா வந்தபடி உள்ளனர். நம் நாட்டில் இப்படி அழைத்துப் போவதும் இல்லை. இவர்கள் புறப்படுவதும் இல்லை. வீட்டில் அடைந்து கிடந்தே உடலும் உள்ளமும் நைந்து விடுகின்ற னர். கோயில் குளம் மட்டுமே இவர்களின் அதிகபட்ச பயணம். முதியோர்களின் ஏக்கப் பெருமூச்சை கோயிலில்தானே விட முடிகிறது. சினிமா பார்க்கச் செல்வதுகூட குறைந்து விடுகிறதே.
Leisure என ஆங்கிலத்தில் சொல்லப்படும் உரிமையை பொழுது போக்கும் உரிமை என சொல்லும் போது முழுப் பொருள் வரவில்லை.மனமகிழ்ச்சிக்கான உரிமை. அதாவது மனம் விரும்பியதை கண்டு, கேட்டு, உண்டு, உறங்கி, மகிழ்ந்து கொண்டாடும் ஆனந்த நேரம் எனலாம்.இவ்வுரிமை இந்திய முதியோருக்கு தமிழ்நாட்டு முதியோருக்கு அறவே மறுக்கப்பட்டுள்ளது. நம் பண்பாட்டுப் பார்வையில் கோயில் குளம் என்பதற்கு மேல் நீளவே இல்லை. வீட்டில் சும்மாதானே இருக்கிறாங்க. அப்புறம் என்ன என்கிற எகத்தாளப் பார்வை வீசப்படுகிறது. கணவனை இழந்த மனைவியை வீட்டில் கூடமாட வேலைசெய்ய இன்னொரு கை எனக் கருதிக் கொள்வர்; மனைவியை இழந்த கணவருக்கு அந்த வாய்ப்பும் தமிழ்ச் சமூகத்தில் இல்லை. பெண்களின் முதுமை பெரும்பாலும் கிட்டத்தட்ட வீட்டுக்குள்ளேயே அடிமை வேலைக்காரி நிலைக்கு போய்விடுவதை எழுத பல நூறு பக்கங்கள் வேண்டுமே!
முதுமையில் மகனுக்கு அடங்கி வாழும் வாழ்க்கையே பெண்களுக்கானது என சனாதனம் பேசும் நாடாயிற்றே! “வீட்ல பெருசு என்ன செய்யுது? பெருசு இங்க என்ன பண்ற?”- என்கிற கேள்விகளே சுமையாகிவிட்ட உணர்வை அன்றாடம் திணிக்கிறது. ஒவ்வொரு முதியவரிடமும் ஏதோ ஒரு செழுமையான அனுபவம் குடிகொண்டிருக்கிறது.அதனை சமூக முன்னேற் றத்துக்கு பயன்படுத்த நம்மிடம் என்ன வழி இருக்கிறது? முதியோர் வெட்டிச் சுமை அல்ல அவர்களிடம் நாம் பெற, கற்க நிறைய இருக்கின்றன. எப்போது சமூகம் இதனை உணரும்? இதனை தமிழ்நாடு அரசின் கொள்கைக் குறிப்பு பேசினாலும் அரசின் சமூகத்தின் உணர்வாக செயல்பாடாக பரிணமிப்பது எப்போது? முதியோரும் சாகும் வரை ஆணையிடும் இடத்தில், ஏதோ ஓர் பதவியில் ஒட்டிக்கொண்டே இருப்பேன் என்கிற பிடிவாதத்தை விட்டொழித்து எந்த கிரீடமும் சூட்டிக் கொள்ளாமல் இளைஞர்களோடு இணைந்து ஏதேனும் தொண்டாற்ற பணி செய்ய முன்வந்தால் வெறுமை அகலுமே! பொழுதெலாம் நெஞ்சம் இனிக்குமே! இதற்கு முதியோர், தான் என்கிற அகந்தையை விட்டு கீழே இறங்க வேண்டும். உபதேசங்களை யாரும் விரும்ப மாட்டார்கள். வற்புறுத்தாத இனிய உரையாடல்களே உங்களை அவர்களோடு நெருக்கமாக்கும். இதனை முதியோர் உணர்தல் அவசியம்.
மூத்தோர் சொல்லே கட்டளை என்பது அந்தக் காலம்; இன்றைய வேகமான மாறுதல்களை முதியோர் உள்வாங்கலே பெரும் பிரச்சனை. நீங்கள் சொல்லலாம்; கேட்கவில்லையே என வருந்த வேண்டாம். உங்கள் பார்வையில் நீங்கள் சொன்னீர்கள். அவர்கள் தேவையில் முடிவெடுக்கிறார்கள் என்பதைப் புரிந்திடுக! ஆன்மீகமே முதுமையின் கடைசி புகலிடம் என்கிற கருத்து நம்மிடையே ஆழமாக வேர்விட்டுள்ளது. மன மகிழ்ச்சி கிடைக்கும் எனில் அதில் முதியோர் ஈடுபடட்டும். பிழையில்லை. ஆயின் வெறுப்பை விதைக்காத – அன்பைப் பொழிகிற – கருணையால் அணைக்கிற ஆன்மீகமாக இருக்கட்டும். வெறுப்பை விதைக்கிற பகையை மூட்டுகிற சாதி, மத மோதலை ஊக்குவிக்கிற ஆன்மீக சேவை வேண்டவே வேண்டாம்! அது இருக்கட்டும் கோயிலுக்கு போயும் அங்கே என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள். வாழ்வின் கசப்பை, அன்றாட வலியை… இதில் அந்த நிமிடம் கொஞ்சம் விட்டாற்றி கிடைக்கலாம் ஆயினும் அதே குட்டையில் உழலவைக்கும். ஆக, ஆன்மீகம் விடையா?
நாலு பிள்ளைகளுக்கு உங்களுக்குத் தெரிந்த மொழியை, கணிதத்தை, அறிவியலை, சமூக அறிவியலை, ஓவியத்தை, இலக்கியத்தை, கலையை, விளையாட்டை, வித்தையை கற்றுக்கொடுங்கள். வருமானம் ஈட்டுவதற் காகச் செய்ய வேண்டியது இருப்பின் அப்படியும் செய்ய லாம். இல்லையேல் இலவசமாகச் சொல்லிக் கொடுங்கள். அது பெரும் மனநிறைவைத் தரும். பதவி பற்றற்று ஊருக்கு தொண்டாற்றுங்கள்! அநீதியை எதிர்த்து உறுதியாய் நில்லுங்கள்! அதில் மனநிறைவு கிடைக்கும்! சமூக அநீதிக்கு எதிராக வாழ்வின் இறுதி நொடிவரை இயன்ற வழியெல்லாம் குரல் கொடுங்கள் . இசையும் புத்தகமும் போல மனதுக்கு உற்சாக ஊக்கி வேறெதுவும் இல்லை. முதுமையில் உணவும் உடல் பயிற்சி யும் முக்கியம். இது அவரவர் சூழலுக்கு ஏற்பவே அமையும். கிடைப்பதை திட்டமிட்டு ஒழுங்கமைத்துக் கொள்க!
முதியோர்கள் தங்கள் சேமிப்பை, சொத்தை தங்க ளுக்குப் பிறகே வாரிசுகளுக்கு என்பதில் உறுதியாய் இருங் கள். அப்படியே முன்கூட்டியே எழுதிவைத்தாலும், அவர்கள் கைவிட்டுவிட்டால், அதனை உடனே மீட்க முடியும். முதியோ ருக்கு எதிரான வன்முறையை அவமதிப்பை சகிக்க முடியாது. சட்டம் பாதுகாப்பு தந்தாலும் அதனை நாம் பயன்படுத்த பழக வேண்டும். நிர்வாகத்திற்கும் முக்கியமாக காவல் துறைக்கும் இந்த பொறுப்புணர்ச்சி அதிகம் ஊட்டப்பட வேண்டும். முதியோரை அலைக்கழிக்கும் செக்குமாட்டுத்தனம் களைந் தெறியப்பட வேண்டும். உங்கள் சேமிப்பை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஈமுக் கோழிகள் தின்னக் கொடுத்து விடாதீர்கள். ஏமாந்து நொந்த கதை இனியும் வேண்டவே வேண்டாம். குழந்தை கொண்டாடு வதற்கு – இளமை இனிதே – நடுத்தர வயது வாழ்வதற்கே– முதுமையும் கொண்டாடுவதற்கே. கழிவிரக்கம் கொள்ளாதீர்! அரசு ஒருங்கிணைந்த முதியோர் கொள்கையை முன் வைத்துள்ளது. பரவலாக விவாதித்து தேவையான திருத்தங் களைக் கோருவோம். அரசு சொல்வதோடு நிற்காமல் அட்சரம் பிசகாமல் அமலாக்க சமூகம் விழிப்புற்று நிர்ப்பந்திக்க வேண்டும். சமூகத்தை முதியோர் வாழத் தகுந்ததாக பொருளாதாரச் சமூகச் சூழலை மாற்றுவோம்!