districts

img

மலைப்பாதையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சென்னை இளைஞர்கள்

ஊட்டி செல்லும் மலைப்பாதையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.உடனடியாக காரை விட்டு 3 பேரும் இறங்கி ஓடியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

சென்னை அமிந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் சரண் கிஷோர் (22).இவரது சென்னையை சேர்ந்த நண்பர்கள் ஜெகதீஷ் (22)  வசீகரன் (22) ஆகிய மூன்று பேரும் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு திருப்பூர் வந்துள்ளனர்.பின்னர் ஊட்டி செல்வதற்காக 3 பேரும் 07-06-2023 அன்று  இரவு காரில் புறப்பட்டுள்ளனர்..கோவை மாவட்டம்,  மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலை சாலையில் கல்லார் என்னுமிடத்தில் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே கார் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் முன் பக்கம் இருந்து கரும்புகையும் லேசான நெருப்பும்  வரத் தொடங்கியுள்ளது.. இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த மூன்று பேரும் உடனடியாக காரை விட்டு இறங்கி ஓடியுள்ளனர்.இந்நிலையில் அவ்வழியே கடந்து சென்ற உள்ளூர் வாகன ஓட்டிகள் இது குறித்து  மேட்டுப்பாளையம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தினர்.தகவல் கிடைக்கப்பெற்றதும் மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும்  தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.காரில் பிடித்த  தீ மளமள பரவி செந்நிற ஜுவாலையுடன் எரிந்து கொண்டிருந்தது. காரின் மீது தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்..சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.இத்தீவிபத்தில் கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடு போல் காட்சியளித்தது.காரின் முன் பக்கம் பகுதியில் இருந்து புகை வெளியேறியதைக் கண்டதும் காரில் இருந்த மூன்று பேரும் இறங்கி ஓடியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்கள்.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.இரவு நேரத்தில் மலைப்பாதையில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது..

;