கும்பகோணம், ஜூன் 7- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவல் தராத கும்பகோணம் தாசில்தாருக்கு ரூ.15,000 அபராதம் விதித்து தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் என்.சங்கர். இவர், பொதுமக்கள் நலன் சார்ந்த ஆவண தகவல்களான, கும்பகோணத்தில் அனைத்து சர்வே வார்டுகள், பிளாக்குகள் உள்ளடங்கிய,
முழுமையான 1969 செட்டில்மெண்ட் ‘அ’ பதிவேடுகள், அனைத்து சர்வே வார்டுகளிலும் 2007 ஆம் ஆண்டு முதல் வருவாய் சரக சார் ஆய்வாளர் சுற்றுக்குழு மற்றும், ஆய்வாளர் நில அளவை பதிவேடுகள் துறையினரால் தயாரிக்கப்பட்ட அசல்கேட்பு பட்டியல்கள் ,மற்றும் 2008 -இல் வருவாய் துறையினரால் நில உரிமையாளர்களின் பெயர்கள் ,எந்தந்த ஆவணங்களின் அடிப்படையில் புதிதாக தயாரிக்கப்பட்டது என்பது குறித்த கள விசாரணை பதிவேடுகள் உட்பட தயாரிக்கப்பட்ட, கேட்பு பட்டியல்களில் உள்ள குளறுபடிகளை கண்டறிந்து சரி செய்யாத அலுவலர்கள் விவரம், 2018 ஆம் ஆண்டு கணினி பதிவேற்ற பிழைகளுக்கு திருத்தம் கோரி வர பெற்ற மனுக்களுக்கு என்ன தீர்வு எடுக்கப்பட்டது உட்பட பல்வேறு ஆவணங்கள் பார்வையிட்டு நகல்கள் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2 (j) பிரிவின்படி, கும்பகோணம் தாசில்தாருக்கு கடந்த 2021 மே 12 ஆம் தேதி மனு செய்திருந்தார்.
இதில் பதில் வராத நிலையில், இரண்டாம் முறையும் தகவல் கோரி மனு அனுப்பினார். இதனால் அதற்கும் கும்பகோணம் தாசில்தார் ஆவணங்களாக தகவல் தரவில்லை. தகவல் உரிமைச் சட்டத்தை மதிக்காத கும்பகோணம் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இழப்பீடு கேட்டும் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு சங்கர் புகார் மனு அனுப்பினார். இதையடுத்து, கடந்த 2024 மே இரண்டாம் தேதி அன்று இந்த மனு, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முதன்மை தகவல் ஆணையர் முஹம்மது ஷகீல் அக்தரால் சென்னையில் விசாரிக்கப்பட்டது.
விசாரணை அடிப்படையில் பின்வரும் உத்தவை பிறப்பித்தார். அதன் நகல் மனுதாரருக்கு ஜூன் 7 வெள்ளியன்று கிடைக்கப் பெற்றது. மே 30 ஆம் நாளிட்ட உத்தரவு மாவட்ட ஆட்சியர், மேல்முறையீட்டு அலுவலர், சம்பந்தப்பட்ட தாசில்தார், மனுதாரர் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டது. அப்போதைய கும்பகோணம் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் சண்முகம், அப்போதைய வட்டாட்சியரும் மேல் முறையீட்டு அலுவலருமான து.கண்ணன் ஆகியோருக்கு உரிய விளக்கம் கேட்டும், மனுதாரரின் கோரிக்கைக்கு மூன்று ஆண்டு காலமாக தகவல் வழங்கப்படவில்லை என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 19(18) (b)I-இன்படி மனுதாரருக்கு இழப்பீடாக 15000 ரூபாய் அபராதம் வழங்கப்பட வேண்டும் எனவும், மனுதாரர் கேட்ட தகவல்கள் அனைத்தையும் வழங்கி, இதுகுறித்து அறிக்கையை தகவல் ஆணையத்திற்கு வழங்கிட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார். இந்த விசாரணையின் போது மனுதாரர் சங்கர், கும்பகோணம் தலைமையிடத்து துணை வட்டாட்சியரும், பொது தகவல் அலுவலருமான திரிபுரசுந்தரி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.