கிருஷ்ணகிரி, பிப்.1- பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரம் குறித்த ஆவணப் படத்தை ஊத்தங்கரை பகுதியில் தனி ஒரு இடத்தில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இத்தகவல் அறிந்து பாஜகவினர், வாலிபர் சங்கத்தினரை கைது செய்ய வலியுறுத்தி நான்குவழிச் சாலை சந்திப்பில் இருந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மறியலிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், தலைவர் சக்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சதீஷ், கோபி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிஆர்பிசி 151ல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் தலையீட்டின் பேரில் இரவு 10 மணிக்கு மேல் வாலிபர் சங்கத் தலைவர்களை விடுதலை செய்துள்ளனர். கருத்து சுதந்திரம்,ஜனநாயகத்திற்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் சிபிஎம் ஊத்தங்கரை வட்டச் செய லாளர் மகாலிங்கம், பாஜகவினரின் வற்புறுத்தலுக்கு இணங்கி வாலிபர் சங்க நிர்வாகிகள் மீது பதிந்துள்ள வழக்கை காவல்துறை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.