districts

img

குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் ஓடிய தண்ணீர்

கள்ளக்குறிச்சி, ஏப். 17-   கள்ளக்குறிச்சி அருகே மணலூர்பேட்டை- ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் மணலூர்பேட்டையில் இருந்து ராட்சத குழாய் மூலம் சின்னசேலம் வரை செல்கிறது. இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. தியாகதுருகம் அருகே வடதொரசலூர் மற்றும் அண்ணா நகர் பகுதியில் இந்த குடிநீர் செல்லும் ராட்சத குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலைகளில் வெளியேறி வீணாகிறது. இவ்வாறு வெளியேறும் குடிநீர் அந்தப்பகுதியில் குளம் போல் தேங்கி உள்ளது. மேலும் அந்த உடைந்த குழாய்களின் வழியாக மீண்டும் அங்கு தேங்கி கிடக்கும் நீர் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து குடிநீர் வீணாகாமல் தடுக்கவும் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.