districts

img

வாய்க்கால் மேடு செங்கொடி நகரானது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி பதிலிருந்து,

பட்டியலின மக்களோடு இருளர், மலைக்குறவர் உள்ளிட்ட 15000 பழங்குடியினர் வசிக்கும் இந்த மாவட்டத்தில், குடி மனை முக்கிய பிரச்னையாகும். பழங்குடி மக்களுக்கு இன சான்றிதழ் கிடைப்பது குதிரை கொம்பு.

பரங்கிபேட்டை ஒன்றியத்தில் கொத்தட்டை கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி கொரோனா நிவாரண பணி செய்தது.

பிறகு ரஞ்சிதா என்ற இருளர் இன சகோதரி கொத்தட்டைக்கு நம்மை அழைக்க, அப்போதைய இடைக்குழு செயலாளர் ரமேஷ்பாபுவும், தோழர்களும் சென்றனர். ஆதார் இல்லை, இன சான்றிதழ் இல்லை, குடிமனை இல்லை என்ற குரல்களைக் கேட்டனர். அவர்களை அணி திரட்டி போராடினர்.

ஓர் இளம் ஐஏஎஸ் அதிகாரி, சார் ஆட்சியராகப் பொறுப்பேற்று, நாம் எடுத்து சொன்ன அடிப்படையில் இருளர் குடியிருப்புக்கு வந்தார். நிலைமையைப் புரிந்து கொண்டார். அவரது உதவியுடன் 115 பேருக்கு பழங்குடி சான்றிதழ் பெற்று தரப்பட்டது. தமிழகத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சான்றிதழ் கிடைப்பது பொதுவாக அரிது. அவர்களது 20 ஆண்டு கால போராட்டத்தில் இது முதல் வெற்றி.

அடுத்து 11 குடும்பங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்வழங்கிய ஒப்படைவு வீட்டு மனை பட்டா காகிதமாக மட்டுமே இருந்தது. உண்மையான நிலம் சாதி ஆதிக்க சக்திகளிடம் புழக்கத்தில் இருந்தது. நமது தொடர் தலையீட்டுக்கு பின், நிலம் மீட்கப்பட்டு ஒரிஜினல் பட்டா வழங்கப்பட்டது.

கடந்த ஜூலை 23ம் தேதி, நம் தோழர்களுடன் சேர்ந்து 11 குடும்பத்தாரும் சார் ஆட்சியரின் குளிரூட்டப்பட்ட அறையில் சோபாவில் அமர வைக்கப் பட்டனர். குனிந்து, வளைந்து அய்யாமார்களிடம் விண்ணப்பம் போடும் நிலையிலேயே வைக்கப்பட்டவர்களுக்கு இந்த புதிய அனுபவம் எல்லையற்ற நம்பிக்கையை ஊட்டியது. பட்டாவைத் தொட்டவுடன் அவர்களுக்குக் கண்ணில் நீர் தளும்ப, அதைப் பார்த்து சார் ஆட்சியர் நெகிழ, நமது தோழர்கள் கண் கலங்க… உணர்ச்சிமயமான நிகழ்ச்சியாக அமைந்தது.

கர்ப்பமாக இருந்த ரஞ்சிதா குனிந்து இடைக்குழு செயலாளர் காலைத் தொட முயற்சிக்க, நமது தோழர்கள் தடுத்து, உங்களது போராட்டமே வெற்றிக்கு காரணம் என விளக்கினர். இப்போது சார், அண்ணா என்பது மறைந்து போய், தோழர் என அழைக்கின்றனர். யாரும் சொல்லி கொடுக்க வில்லை, போராட்டம் என்கிற ரசவாதமே கருத்தையும், வார்த்தைகளையும் மாற்றியிருக்கிறது.

அதுமட்டுமல்ல.. மீட்கப்பட்ட அந்த இடம் சில நாட்களுக்கு முன்பு (23. 12.21) அன்று செங்கொடி நகர் என பெயர் பூண்டது. ஆம், அந்த இருளர் குடியிருப்பின் பெயர் இப்போது வாய்க்கால் மேடல்ல, நானும் கலந்துக்கொண்ட நிகழ்வில், அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்துடன் செங்கொடி நகர் என பெயர் கொண்டுள்ளது.

இதை தொடர்ந்து விருதாச்சலத்தில், காட்டுமன்னார்கோயிலில் என இவர்களுக்கான போராட்டம் விரிகிறது.