கடலூரில் கட்டப்பட்டிருந்த பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடலூர் எஸ்.புதூர் வண்டிக்குப்பம் பகுதியில் பழமைவாய்ந்த இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த கட்டிடத்தில் யாரும் வசித்து வராததால் கட்டிடம் மோசமான நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் இந்த கட்டிடம் அருகே அப்பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீரசேகர், சுதீஷ்குமார் ஆகிய 2 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட புவனேஷ்ரனுக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளை அகற்றி வேறு யாரும் சிக்கியுள்ளனரா? என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடுத்தினருக்கு தலா 2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் புவனேஷின் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐம்பதாயிரமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.