அரியலூர், ஜூன் 8 - அரியலூர் மாவட்டம், தஞ்சை மாவட்டம், கடலூர் என மூன்று மாவட்டங்களை இணைக்கும் கொள்ளிடக்கரையில் அணைக்கரை பாலம் அமைந்துள்ளது. இந்த அணைக்கரை பகுதியைச் சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி குட்டி குட்டி தீவுகள் போல் காட்சி அளிக்கும். இப்பகுதிகளில் கொள்ளிடக் கரையோரம் குடியிருந்து, கொள்ளிடம் ஆற்று தண்ணீரை கொண்டு விவசாயிகள் முப்போகம் விவசாயம் செய்து வசித்து வருகின்றனர்.
மேலும் இவர்கள் அனைவரும் விவசாயம் செய்வது, ஆடு, மாடு மேய்த்தல், மீன்பிடித்தல் உள்ளிட்ட தொழில்களை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
200க்கும மேற்பட்ட முதலைகள்
இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரை, கஞ்சங்கொல்லை கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் திட்டுகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட முதலைகள் வசித்து வருகின்றன. இந்த முதலைகள் ஆடு மாடுகளையும், மாடுகள் மேய்க்க செல்பவர்களையும், மீன் பிடிக்க செல்லும் மீனவர்களையும் அடிக்கடி கடித்து விடுகின்றன. இதனால் விவசாயிகளும் ஆடு, மாடு மேய்க்க செல்பவர்களும், மீன்பிடி தொழிலாளர்களும் ஆற்றின் ஓரத்தில் செல்லும்போது எப்போதும் அச்சத்துடனே சென்று வரும் சூழல் உள்ளது.
நிவாரணம் இல்லை
கடந்த மாதம் ஆடு மேய்க்கச் சென்ற சின்னம்மாள் என்ற முதாட்டியின் காலை கடித்து குதறியது. அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார். அவரது காலில் 60 தையல்கள் போட்டுள்ளனர். இருப்பினும் அவரது கால்கள் இன்னும் சரியாகாமலும் நடக்க முடியாமலும் கோலூன்றி நடந்து வரும் சூழல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சின்னம்மாளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிச் சென்றுள்ளனர். இதுவரை எந்த அதிகாரியும் வரவும் இல்லை, நடவடிக்கையும் இல்லை, நிவாரணமும் இல்லை என்ற நிலை தான் உள்ளது.
குடியிருப்பு நிறைந்த பகுதியில் முதலைகள் நடமாட்டம்
கொள்ளிடம் ஆற்றங்கரையிலிருந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஏரி குளங்களுக்குள் இந்த முதலைகள் சென்று விடுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் இருந்த முதலை ஒன்று வீரசோழபுரம் கிராமம் மெயின் ரோட்டில் உள்ள தீர்த்த குளத்திற்கு வழிதவறி வந்துள்ளது. அந்த முதலையானது இரவு இளைப்பாற தீர்த்தக் குளத்தின் கரைப்பகுதிக்கு வந்து ஒதுங்கி உள்ளது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக மீன்சுருட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வனத்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அந்த முதலையை லாவகமாக பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தி அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் கொண்டு விட்டனர். இதுபோல் குடியிருப்பு பகுதிகளுக்கு முதலைகள் அடிக்கடி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் ஆடு மாடுகளையும் பிடித்து விடுகிறது.
அதிகாரிகளுக்கு புரிதல் இல்லை
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, முதலைகள் பற்றிய புகார் தெரிவித்தால், அவர்கள் வனத்துறையினராக இருந்தாலும் போலீசாராக இருந்தாலும் நீங்கள் ஆற்றுப்பகுதிகளுக்கு செல்லக்கூடாது என ஒற்றை வார்த்தையால் தடைவிதித்து வருகிறார்கள். சுற்று வட்டார பகுதி மக்கள் அனைவரும் நாங்கள் விவசாயத் தொழிலையும் ஆடு மாடுகள் மேய்ப்பதையும் மீன்பிடிப்பதையுமே தொழிலாக செய்து வருகிறோம்; எங்களுக்கு வேறு தொழில் தெரியாது; எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது பற்றிய புரிதலை தெரிவிப்பதுடன், தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் அதிக முதலைகள் இருப்பதால், முதலைகள் அனைத்தையும் ஓரிடத்தில் கொண்டு வந்து, முதலைப் பண்ணை அமைக்க வேண்டும், அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் அருகில் கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட சுற்றுலா மையங்களுக்கு வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளும், கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதி புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்பவர்களும் இந்த முதலைப் பண்ணையை பார்த்து செல்வார்கள்; இதனால் அரசுக்கும் வருமானமும் கிடைக்கும். பொதுமக்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விவசாயிகளுக்கும பாதுகாப்பாக இருக்கும்; முதலைகளும் பாதுகாப்பாக இருக்கும்; எனவே தமிழக அரசு தலையிட்டு உடனடியாக அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் முதலைப் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், மீன்பிடி தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு செல்லவில்லை என்றும் அவர்கள் குமுறுகின்றனர்.
எனவே ஏழை எளிய விவசாயிகள் மீன்பிடி தொழிலாளர்கள் நலன் கருதி அரசு முதலைப் பண்ணை அமைக்க முன்வர வேண்டும் என விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கந்தசாமி, சிபிஎம் ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.