அரியலூர், மே 10 - அரியலூர் மேல அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர் கீழப்பழுவூரில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் ஆலையில், கடந்த மூன்று வருடமாக ஒப்பந்தத் தொழிலாளியாக பேக்கிங் யூனிட்டில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் வியாழனன்று இரவு 9 மணியளவில், ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பேக்கிங் யூனிட்டில் இருந்த பெல்ட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சக தொழிலாளர்கள் சிமெண்ட் ஆலை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்பு, முரளி கிருஷ்ணனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்துள்ளனர்.
முரளி கிருஷ்ணனின் உறவினர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டனர். உறவினர்களை பார்த்ததும், ஆம்புலன்சில் வந்த சிமெண்ட் ஆலை அதிகாரிகள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோர், ஆம்புலன்ஸை மருத்துவமனை வளாகத்திலேயே விட்டுவிட்டு அனைவரும் தலைமறைவாகி விட்டனர். இதனால் உடலை கூராய்வு செய்வதற்கான கையெழுத்து போடக்கூட யாரும் இல்லாமல், முரளி கிருஷ்ணனின் உடல், சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்சிலேயே வைக்கப்பட்டிருந்தது.
சிமெண்ட் ஆலை நிர்வாகத்தின் சார்பில் யாரும் வராதது, முரளி கிருஷ்ணனின் உறவினர்களிடையே பெரும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், அவரது உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், ஆலை நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு வந்து எவ்வாறு விபத்து ஏற்பட்டது; உயிரிழந்த உடலை உடற்கூராய்வுக்கு மருத்துவமனையில் ஒப்படைக்காமல் சென்றதற்கான காரணம் என்ன என்பது குறித்து கூற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிமெண்ட் ஆலை நிர்வாகம் சார்பில் அதிகாரி ஒருவர் வந்து கையொப்பமிட்ட பின், உடல் உடற்கூராய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்தவரின் குடும்பத்திற்கு சிமெண்ட் ஆலை நிர்வாகத்தின் சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.