districts

img

தென்காசி அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து

தென்காசி, ஜூன் 13- தென்காசி அருகே டிப்பர் லாரி மோதி  தனியார் பேருந்து  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த 4வயது சிறுவன் ,இரண்டு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லி புத்தூருக்கு வியாழனன்று பிற்பகல் தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. இதை வாசு தேவநல்லூர் அருகேயுள்ள ஏமன்பட்டியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் விக்னேஷ்  (வயது 27) ஓட்டிச் சென்றார்.

 சுமார் 2 மணி  அளவில் தென்காசி அருகே கொல்லம்-திரு மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூர் விலக்கு ரவுண்டாணா பகுதியில்  பேருந்து சென்ற போது கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றிச் செல்ல செங்கோட்டை சாலையில் இருந்து வந்த டிப்பர் லாரி திடீரென பேருந்து மீது மோதியது. இதில் தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்தது.  தகவல் அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்றார்.

உடனடி யாக ஜேசிபி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த நிலையில் கிடந்த பேருந்தை நிமிர்த்தி அதில்  இருந்த பயணிகளை பத்திரமாக இறக்கினர்.  இந்த விபத்தில் சிவராமபேட்டை வடக்கு  தெருவைச் சேர்ந்த மாரிதுரை மனைவி அழகு சுந்தரி (35), சங்கரன்கோவில் லெட்சுமியா புரம் 5 வது தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி செல்வி (55)  ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இறந்த அழகுசுந்தரி தனது 4 வயது மகன் அட்சய பாலாவை கைகளால் அணைத்துக் கொண்டு இருந்ததை காண முடிந்தது.

அச்சிறுவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அச்சிறுவனையும், மற்றொரு குழந்தையையும் தென்காசி போக்கு வரத்து காவல் ஆய்வாளர் மணி தனது  வாகனத்தில் தென்காசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே அட்சய பாலா பரிதாபமாக இறந்தான். மேலும் இந்த விபத்தில் பேருந்து  ஓட்டுநர் விக்னேஷ் உட்பட 15 பேர் படுகாய மடைந்தனர். இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

 இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அங்கு கூடியிருந்த பொதுமக்கள்  அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். கேரளாவிற்கு கனிம வளங்கள் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.