புதுக்கோட்டை/தஞ்சாவூர்/நாகப்பட்டினம், ஜூன் 2 - பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் இனப்படுகொலைப் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், துரை.நாராயணன், மக்கள் ஒன்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் மு.அசோகன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத் தலைவர் மு.முத்தையா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் நன்றி கூறினார். தஞ்சாவூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்ட குழு, இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் என்.சீனிவாசன், திமுக தஞ்சை மாநகரச் செயலாளரும், மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன், சிபிஐ (எம்.எல்) மாவட்டச் செயலாளர் கண்ணையன், மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் அகமது கபீர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம். ஜெயினுலாபுதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் வெ.சேவையா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இரா.புண்ணியமூர்த்தி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலர் என்.குருசாமி, சிபிஎம் தஞ்சை ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன், தஞ்சை மாநகரச் செயலாளர் வடிவேலன், கும்பகோணம் நகரச் செயலாளர் செந்தில், மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாநகரக் குழு உறுப்பினர்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், “இன அழிப்பு போரை தடுத்து நிறுத்த வேண்டும். பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள், பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்” என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அவுரி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து தலைமை வகித்தார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி முன்னிலை வகித்தார். திமுக மாவட்டச் செயலாளர் என்.கௌதமன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் ஆர். என்.அமிர்த ராஜா, மதிமுக மாவட்டச் செயலாளர் வே.ஸ்ரீதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் நாக.அருட்செல்வன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஒ.எஸ். இப்ராஹிம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நாகை நகரச் செயலாளர் க.வெங்கடேசன் நன்றி கூறினார்.