தஞ்சாவூர், ஜூலை 8 - தஞ்சாவூரில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 548 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். பின்னர், ஒரத்தநாடு வட்டத்தில் மின்னல் தாக்கி இறந்த கலைச்செல்வன் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ரூ.80,000 வீதம் 5 நபர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மூளை முடக்குவாதத் தினால் பாதிக்கப்பட்ட கும்பகோணம் வட்டத்தைச் சார்ந்த சிறுவனுக்கு சிறப்பு நாற்காலியும், பாபநாசம் வட்டத்தைச் சார்ந்த விஜயலெட்சுமிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தொழிற்கல்வி பயின்று வருவதற்கான உதவித்தொகை ரூ.50,000-க்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பான் செக்கர்ஸ் பப்ளிக் பள்ளி மற்றும் மண் காப்போம் இயக்கம், தி ஸ்ட்ரெட்ச் மல்டி ஸ்போர்ட்ஸ் அரேனா இணைந்து நடத்திய சிலம்பம், ஸ்கேட்டிங் மற்றும் பத்மாசனம் நிலையில் தண்ணீரில் மிதக்கும் போட்டியின் உலக சாதனை நிகழ்வில், வெற்றி பெற்ற மாணவ -மாணவியர்கள் சான்றிதழ் மற்றும் பதக்கத் தினை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். பின்னர், தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்ககம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வா கம் சார்பில் 19.7.2024 முதல் 29.7.2024 வரை தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடை பெற உள்ள 7 ஆவது தஞ்சாவூர் புத்தகத் திரு விழாவின் இணையதளத்தை துவக்கி வைத்து விளம்பர பிரசுரத்தை மாவட்ட ஆட்சி யர் வெளியிட்டார்.