கிருஷ்ணகிரி,மே 20- கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்ததாளப்பள்ளி ஊராட்சி ஆனந்த நகரில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கழிவுநீர் கால்வாய்கள் சாலை,குடிநீர் வசதி ஊராட்சி நிர்வாகத்தால் செய்து தரப்படவில்லை. மழை பெய்ததும் கிராமத்தில் பல இடங்களிலும் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து குட்டையில் தேங்கி நிற்கிறது.இதனால் கொசு தொல்லையும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து அரசு அதிகாரிகளிடம், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடிநீருக்கான ஆழ்துளை கிணறு அமைத்து குழாய்கள் போடப்பட்டு பல மாதங்களாகியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.