districts

நடுக்கடலில் எரிந்த விசைப்படகு மீனவர்கள் மறியல்

விழுப்புரம், ஜூலை 5-

    விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே அனுமந்தை மீனவ குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (56). இவர், வழக்கம் போல் மீன் பிடித்து விட்டு தனது விசைப்படகை நடுக்கடலிலேயே நங்கூரமிட்டு நிறுத்தி விட்டு கரைக்கு வந்துள்ளார்.

    இந்நிலையில், நள்ளிரவில் இவரது விசைப்படகு மர்மமான முறையில் தீப்பற்றி எரிவதாக அப்பகுதி மக்கள் மதியழகனுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மதியழகன் மற்றும் அப்பகுதி மீனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  

   இதனையடுத்து தங்களது சிறிய படகு மூலம் அங்கு செல்வதற்குள் விசைப்படகு முற்றிலும் எரிந்து நாசமாயியது. இந்த தீ விபத்தினால் ரூ.30 லட்சம் மதிப்பிலான விசைப்படகு மற்றும் வலை உள்ளிட்ட மீன் பிடி சாதனங்கள் எரிந்து சேதமானது.

   இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் காவல்துறையினர் மீன்வளத் துறை அதிகாரிகள் கடலோர காவல் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை நடத்தினர். அப்போது, படகுக்கு தீ வைத்த நபர்களை கண்டுப் பிடித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.