சென்னை, ஜூலை 21-
தமிழகத்திலிருந்து இமாச்சலப் பிரதேசம் சென்ற 12 ஆர்க்கிடெக்ட் மாணவர்கள், அங்கு நிலச்சரிவில் சிக்கி உயிருக்குப் போராடிய போது மாநில அரசு உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டனர்.
ஆர்க்கிடெக்ட் படிப்பு முடித்ததைக் கொண்டாட - அண்மையில், இமாச்சலப் பிரதேசம் சென்ற தமிழகத்தை சேர்ந்த 12 மாணவர்கள், அங்கு பல இடங்களில் மழை காரணமாக, திடீர் வெள்ளப் பேருக்கு ஏற்பட்டுள்ளதை அறிந்து சுற்றுலாவைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பத் தொடங்கினர்.
ஆனால் வழியில், அவுட் என்னும் கிராமம் அருகே அவர்கள் வந்த போது, அவர்களது வேன் மீது, மலைச் சரிவிலிருந்து பெரும் பாறை உருண்டு மோதியது. உடனே ஓட்டுநர் குப்புற கவிழுவிருந்த வேனை உடனடியாக நேர்படுத்தி, நிலச்சரிவில் சிக்காமல் சாமர்த்திய மாக சமாளித்தார். ஆனாலும், பேஸ் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், தமிழக மாணவர்கள் தொடர்ந்து பயணிக்க இயலாமல், அவுட் கிராமத்திலேயே சிக்கிக் கொண்டனர். நிலைமை சீராக ஒரு வாரம் ஆகும் என்று அக்கிராம மக்கள் கூறியதால், அந்த 12 பேர் குழுவில் இருந்த மாணவி கவிஷா தமிழகத்தில் பெற்றோரைத் தொடர்பு கொண்டார்.
அவர்கள் மூலம் நடந்ததைக் கேள்விப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமாகிய பிரவீன் சக்ரவர்த்தி, உடனே இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவைத் தொடர்பு கொண்டு, அம்மாநில அரசின் மீட்புப் படையின் உதவியுடன் தமிழக மாணவர்களை மீட்டார். பின்னர் 12 மாணவர்களும் பத்திரமாக தமிழகம் வந்து சேர்ந்தனர்.