செங்கல்பட்டு, மே 29- செங்கல்பட்டு மாவட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் 100 விழுக்காடு தேர்ச்சி அளித்த மேல்நிலைப்பள்ளி முதுகலை பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 72 மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 475 முதுகலை ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த பாடங்களில் 100 விழுக்காடு தேர்ச்சி அளித்ததற்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டி பேசுகையில், ஆசிரியர் பணி உன்னதமான பணி , ஆசிரியர்களால் மட்டுமே நல்லதொரு சமுதாயத்தை மாணவர்கள் மூலம் உருவாக்க முடியும் என்பதை தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக எடுத்துரைத்தார். மேலும் தான் முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையை ஆசிரியர்கள் மூலம் பெற்றார் என்பதனையும் நினைவு கூர்ந்தார். எனவே ஆசிரியர்கள் மூலமாக மட்டுமே மாணவர்கள் தனித்திறன்களை கண்டறிந்து அதனை வளர்த்தெடுத்து மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க முடியும் எனக் குறிப்பிட்டு ஆசிரியர்களின் பணித்திறனை பாராட்டினார். இந்நிகழ்வில் திருக்கச்சூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அக்ஷயாவுக்கும் தாகூர் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவு சேர்ந்து பயில்வதற்கான பயிற்சி கட்டணத்தை (ரூ 25 ஆயிரம்) இந்தியா என்.ஜி.ஓ. தகிருஷ்ணமூர்த்தியால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள் , ஆசிரியர்கள் பங்கேற்றனர்.