districts

img

கோவைக்கு ஆம்னி பேருந்தில் பயணித்த இளம் பெண் சடலமாக மீட்பு!

சென்னையிலிருந்து கோவைக்குத் தனியார் ஆம்னி பேருந்தில் பயணித்த இளம்பெண் பேருந்து இருக்கையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி. இவர் சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த செவ்வாய் இரவு தனியார் ஆம்னி பேருந்து மூலம் கோவை திரும்பியுள்ளார். பேருந்தில் கீழ் படுக்கையில் பயணம் செய்த மகாலட்சுமி கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று காலை பேருந்து நின்ற பிறகும் இறங்கவில்லை.

இறுதியாகப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரிடம் காந்திபுரம் வந்த தகவலைக் கூற சென்றபோது அவர் எழும்பாததால் சந்தேகமடைந்த அவர்கள், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவலளித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகாலட்சுமியைப் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தகவலறிந்து வந்த காட்டூர் காவல்நிலைய போலீசார் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

;