மேட்டுப்பாளையம், ஆக. 7- கன மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 6 நாட்களாக தடை பட்டிருந்த உதகை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலைரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவர். இதற்காக உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகயளவு வருகை தருவது வழக்கம். இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதியன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக ஹில்குரோ - அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாள பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் மலை ரயில் சேவை 6 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செவ்வாயன்று மாலை சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், இன்று (ஆக.7) காலை 7.10 மணிக்கு வழக்கம் போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி செல்லும் மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது.
இதனால், உலக பாரம்பரிய சின்னமான மலைரயிலில் பயணிக்க ஏற்கனவே முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் மலை ரயிலில் பயணித்தனர்.