districts

மலேசியாவில் மரணம் அடைந்த கணவர் உடலைக் கொண்டு வர கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கடலூர், ஜூன் 16- குடும்ப வறுமைக்காக மலேசியா வேலைக்குச் சென்ற தனது கணவர் பாஸ்கர் மரணமடைந்து விட்டார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்று பாஸ்கரின் மனைவி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோயில் அருகே உள்ள அள்ளியூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. மனைவி மகாலட்சுமி மற்றும் 70 வயது தாயாருடன் வசித்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக மலேசியாவில் ஹோட்டல் வேலைக்கு செல்வதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்றார்.

குடும்பத்துடன் தொடர்பில் இருந்து வந்த அவர், கடந்த பத்தாம் தேதி முதல் தொடர்பு இல்லாமல் போனது. சனிக்கிழமை (ஜூன் 15) பாஸ்கர் செல்போனில் இருந்து அவரது மனைவியை தொடர்பு கொண்ட மலேசியா போலீசார் பாஸ்கர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் எந்த தகவலும் தெரி விக்காமல் தொடர்பை துண்டித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த  மகாலட்சுமி, மலேசியாவிற்கு தொடர்பு கொண்ட போதும் பாஸ்கர் நிலை என்ன என்று தெரியவில்லை.  இந்த நிலையில், அள்ளியூர் கிராமத்தை சேர்ந்த மக்களுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு வந்த மகாலட்சுமி, ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அதில், தனது கணவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டு பிடிக்க வேண்டும், அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.