court

img

69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தவே உத்தரவிட்டோம்... ஒன்றிய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு....

சென்னை:
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தவே உத்தரவிட்டோம் என்றும் இந்த இடஒதுக்கீடுவிவகாரத்தில் ஒன்றிய அரசு  பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் மருத்துவப் படிப்பில் அகிலஇந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதமான இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென வழக்குகள் தொடுத்து தொடர் சட்டப்போராட்டத்தை நடத்தின. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலையில் உத்தரவிட்டது.நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. 

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழுநியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரையின் அடிப்படையில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ள்ளதாகவும் நீதிமன்ற அவமதிப்பு ஏதும் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.ஆனால் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் குற்றம் சாட்டினார். மேலும் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யவே குழு அமைக்க உத்தரவிடப்பட்டதாகவும், ஒன்றிய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்  தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை புறக்கணிக்க முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், ஒன்றிய அரசின் குழுவும், உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன என்றும் வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு இயற்றிய சட்டத்தின்அடிப்படையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும்  அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது மொத்த இட ஒதுக்கீடான 50 சதவீதத்துக்குள் வருகிறதா? இல்லையா? எனவும் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பினர். இதுகுறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தர விட்டனர். பதிலளிக்க ஒன்றிய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனையேற்று  வழக்கு விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

;