court

img

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கூற்றா..இது.! - தலைமை நீதிபதியே பதவி விலகு...!

 

சிறுமியாக இருந்த போது பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைக் கைது செய்வதற்கு ஒரு மாத காலம் இடைக்கலத் தடை விதித்த உச்சநீதிமன்றம் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று குற்றம் சாட்டப்பட்டவரிடமே கேட்டிருக்கிறது.

பள்ளி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு ஊழியரான மோஹித் சுபாஷ் சவான் என்பவரின் ஜாமீன் கோரிக்கை குறித்து உச்சநீதிமன்றம் விசாரணையை மேற்கொண்டதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில மின்உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற சவான், போக்ஸோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தன்னைக் கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு வேண்டுமென்ற கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் முன்வைத்திருந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி காவல்துறையிடம் புகாரளிக்கச் சென்ற போது, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கத் தயாராக இருப்பதாக தன்னுடைய  தாயார் தெரிவித்ததாக உச்சநீதிமன்றத்தில் சவான் கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப் பெண் ஆரம்பத்தில் அதை மறுத்துவிட்ட போதிலும், பதினெட்டு வயதாகும் போது அந்தச் சிறுமியை சவான் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததாக ஓர் ஆவணம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் அந்த ஆவணம் யாருக்கு இடையில் தயாரிக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.  

பதினெட்டு வயதை எட்டியவுடன் அந்தப் பெண்ணை சவான் திருமணம் செய்ய மறுத்த போது, ​​ அந்தப் பெண் அவர் மீது வழக்கு பதிவு செய்ததாக சவான் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. தனது கட்சிக்காரர் வேலையை இழக்க நேரிடும் என்று தெரிவித்த சவானின் வழக்கறிஞரிடம் ‘இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும். இல்லையென்றால் நீங்கள் வேலையை இழந்து சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். அந்தப் பெண்ணை மயக்கி, நீங்கள் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறீர்கள்’ என்று இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்தார். மேலும் அவர் சவானிடம் ‘நீங்கள் அவரைத் திருமணம் செய்து கொள்வீர்களா?’ என்ற கேள்வியையும் அந்த விசாரணையின் போது எழுப்பியிருந்தார்.  

‘அந்த இளம்பெண்ணை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்பாக நீங்கள் இதையெல்லாம் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். நீங்கள் அரசு ஊழியர் என்று உங்களுக்குத் தெரியும்தானே’ என்ற தலைமை நீதிபதி மேலும் ‘நாங்கள் திருமணம் செய்யுமாறு உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. உங்களுக்கு விருப்பமிருந்தால் மட்டும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இல்லையென்றால் நீங்கள் அவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி நாங்கள் உங்களைக் கட்டாயப்படுத்துகிறோம் என்று கூறி விடுவீர்கள்’ என்று குறிப்பிட்டார்.  

ஏற்கனவே தனக்குத் திருமணமாகி விட்டதால் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று குற்றம் சாட்டப்பட்டவர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ‘நான் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவே ஆரம்பத்தில் விரும்பினேன். ஆனால் அவர் அப்போது மறுத்து விட்டார். ஏற்கனவே எனக்குத் திருமணமாகிவிட்டதால் இப்போது என்னால் அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாது’ என்று சவான் கூறியதாக அந்தப் பெண் தெரிவித்தார் என்று என்டிடிவி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தான் அரசு ஊழியர் என்பதால் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுமானால், அரசுப் பணியிலிருந்து தானாகவே இடைநீக்கம் செய்யப்பட்டு விடுவேன் என்பதை சவான் வலியுறுத்திய போது, ‘அதனால்தான் நாங்கள் இந்த சலுகையை உங்களுக்கு வழங்கியுள்ளோம். கைது செய்யப்படுவதற்கு நான்கு வாரங்கள் நாங்கள் தடை விதிக்கிறோம்.  அதற்குப் பின்னர் நீங்கள் வழக்கமான ஜாமீனுக்கு விண்ணப்பிக்கவும்’ என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஏற்கனவே விசாரணை நீதிமன்றம் கைது செய்யப்படுவதிலிருந்து சவானுக்கு பாதுகாப்பை வழங்கியிருந்தது. ஆனால் அது உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

பாலியல் பலாத்கார வழக்குகளுக்கான பொருத்தமான தீர்வாக இந்திய நீதிமன்றங்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்வது குறித்து பல சட்ட வல்லுநர்களும், ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.  

‘பாலியல் பலாத்காரம் செய்ததற்கான நீண்டகாலத் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக பாதிக்கப்பட்டவர்களைத் திருமணம் செய்து கொள்வது என்பது பொதுவாக தவறிழைத்தவர்களால் கடைப்பிடிக்கப்படும் தந்திரமாக இருப்பதாக இந்தியாவில் உள்ள பெண்கள் குழுக்கள், வழக்கறிஞர்கள், குழந்தைகளுக்கான உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர். அந்த தந்திரம் பாலியல் பலாத்காரத்தைச் சுற்றியுள்ள கலாச்சார பிரச்சனைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் இன்று வரையிலும் உயிருடன் வாழுகின்ற சடலங்களாகவே பார்க்கப்படுகிறார்கள்’ என்று ஆல்பர்டினா அல்மேடா தி வயர் இணைய இதழுக்கு வழங்கிய  பகுப்பாய்வில் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாபில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவருக்கு பாதிக்கப்பட்டவரை அவர் திருமணம் செய்து கொண்டால் சுதந்திரமாகச் செல்ல அவரை அனுமதிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்ததை என்டிடிவி மேற்கோளிட்டுக் காட்டியுள்ளது. 2013ஆம் ஆண்டு மற்றொரு வழக்கில் (சிம்பு & மற்றவர் எதிர் ஹரியானா மாநில அரசு) உச்சநீதிமன்றமே இந்த நடைமுறைக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கையில் இறங்கியது. ‘…குற்றம் சாட்டப்பட்டவரின் அல்லது பாதிக்கப்பட்டவரின் மதம், இனம், சாதி, பொருளாதார அல்லது சமூக நிலை போன்றவையோ அல்லது குற்றவியல் விசாரணை நீண்டகாலம் நிலுவையில் இருப்பது அல்லது பாலியல் பலாத்காரம் செய்தவர் பாதிக்கப்பட்டவரைத் திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது அல்லது பாதிக்கப்பட்டவர் திருமணம் செய்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையைத் தொடர்வது போன்றவற்றை சட்டத்தால் பரிந்துரைக்கப்படுகின்ற தண்டனையைக் குறைப்பதற்கான சிறப்பு காரணிகளாகக் கருத முடியாது. விதிவிலக்கு விதிமுறைக்கு கடுமையான விளக்கம் தேவை என்ற காரணத்தினால் இந்த விதிமுறையின் கீழ் உள்ள அதிகாரத்தை வழக்கமான, சாதாரணமான முறையில் கண்மூடித்தனமாக பயன்படுத்தக்கூடாது’ என்று நீதிமன்றம் அப்போது கூறியிருந்தது.

வெளிப்படையாக எழுதப்பட்ட கடிதம் : இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பதவி விலக வேண்டும்

பள்ளிச் சிறுமியை பாலியில் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்படவரிடமே அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்டதற்காக இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தன்னுடைய பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு குழுக்கள், அக்கறையுள்ள குடிமக்கள் அடங்கிய குழு வெளிப்படையான பகிரங்கக் கடிதம் ஒன்றை தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளது.

அந்த பகிரங்கக் கடிதத்தில் அன்னி ராஜா, மரியம் தவாலே, கவிதா கிருஷ்ணன், கம்லா பாசின், மீரா சங்கமித்ரா, அருததி துரு போன்ற பிரபலமான பெண்கள் உரிமை ஆர்வலர்களும், அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பு, சஹேலி, பாலியல் வன்முறை மற்றும் அரசு அடக்குமுறைக்கு எதிரான பெண்கள், THITS, பெண்கள் அடக்குமுறைக்கு எதிரான மன்றம், பெபாக் கலெக்டிவ், பாரதிய முஸ்லீம் மஹிளா அந்தோலன், தலித் விமென்ஸ் ஃபைட், BASO, பெண்கள் மற்றும் திருநங்கைகள் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு, போன்ற பெண்கள் குழுக்களும், அட்மிரல் எல்.ராம்தாஸ், அருணா ராய், நிகில் டே, ஆனந்த் சஹாய், தேவகி ஜெயின், ஜான் தயாள், லக்ஷ்மி மூர்த்தி, அபூர்வானந்த், ஃபரா நக்வி, ஆயிஷா கித்வாய், அஞ்சா கோவாக்ஸ் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபல குடிமக்களும்  கையொப்பமிட்டிருக்கின்றனர்.

கடிதத்தின் முழு உரை கீழே தரப்பட்டுள்ளது.

§

மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களே,

இந்தியப் பெண்கள் இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்களின் பிரதிநிதிகளாகிய நாங்கள் அக்கறை கொண்டுள்ள குடிமக்களுடன் இணைந்து மோஹித் சுபாஷ் சவான் எதிர் மகாராஷ்டிரா மாநில அரசு மற்றும் ஒருவர் வழக்கு தொடர்பாக 2021 மார்ச் 01 அன்று நடந்த விசாரணையின் போது நீங்கள் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள கருத்துக்களைக் கண்டு திகைத்து நிற்கின்றோம். மிகவும் மனம் புண்பட்டிருக்கிறோம்.

பள்ளிக்குச் செல்லும் சிறுமியைத் தொடர்ந்து பின்சென்றது, அவளைக் கட்டி வைத்து, கேலி செய்து, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவேன் என்று அச்சுறுத்தியது. அவளுடைய சகோதரனைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியது போன்ற செயல்களைச் செய்த ஒருவன் தன்னைக் கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை நீங்கள் விசாரித்தீர்கள். அந்த வழக்கு குறித்த உண்மைகளைச் சொல்வதென்றால் பள்ளிக்குச் செல்லும் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி தற்கொலைக்கு முயன்ற போதுதான் அந்த பாலியல் பலாத்காரம் வெளிச்சத்துக்கு வந்தது. ‘சிறுமியை வலுக்கட்டாயமாகப் பாலியல் பலாத்காரம் செய்வதால்’ ஏற்படும் விளைவுகளைப் பற்றி அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும் என்று கூறி, பாதிக்கப்பட்டவரைத் திருமணம் செய்து கொள்ளத் தயாரா என்று நீங்கள் அந்த மனிதனிடமே கேட்டிருக்கிறீர்கள். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு-உயிர் பிழைத்திருப்பவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைப்பதன் மூலம், இந்திய தலைமை நீதிபதியாகிய நீங்கள் தற்கொலைக்கு முயன்ற அந்தப் பெண்ணைத் துன்புறுத்தியவரின் கைகளிலேயே ஒப்படைத்து, வாழ்நாள் முழுவதும் அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை உறுதி செய்ய முயன்றிருக்கிறீர்கள்!  

இந்திய அரசியலமைப்பை விளக்குகின்ற அதிகாரமும் கடமையும் கொண்டு நீதி வழங்கின்ற ஸ்தானத்தில் இருக்கின்ற இந்திய தலைமை நீதிபதியிடம் கூட 'மயக்குதல்', 'பாலியல் வன்முறை', 'திருமணம்' ஆகியவற்றின் பொருளை விளக்க வேண்டிய சுமையை பெண்களே சுமக்க வேண்டியிருப்பது குறித்த கோபம் எங்களுக்குள் எழுகின்றது.   

‘மயக்குதல்’ என்பது இருவரின் சம்மதத்துடன் நிகழும் ஒரு செயலாகும். பாலியல் பலாத்காரம் என்பது ஒருவரின் சம்மதத்தை மீறி அவருடைய உடல் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல் என்பதால் அது வன்முறைச் செயல் என்பது தவிர வேறாக இருக்க முடியாது. இந்த இரண்டையும் எந்தவொரு சூழ்நிலையிலும் ஒன்றாக இணைக்க முடியாது. மேலும் பாதிக்கப்பட்டவர் வயதில் சிறியவராக இருக்கும்போது, ​​அவ்வாறான ஒப்புதல் இல்லாதது நிரூபிக்கத் தேவையற்ற சட்டபூர்வமான அனுமானமாகவே இருக்கிறது.  

மற்றொரு வழக்கு தொடர்பாகவும் (வினய் பிரதாப் சிங் எதிர் உத்தரப்பிரதேச மாநில அரசு) நேற்று ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. 'ஆண், பெண் என்று இருவர் ஒன்றாக வாழும் போது, கணவர் மிருகத்தனம் நிறைந்த மனிதராக இருக்கலாம் என்றாலும், சட்டபூர்வமாகத் திருமணமாகியிருக்கின்ற  ஆணுக்கும் மனைவிக்கும் இடையிலான உடலுறவை பாலியல் பலாத்காரம் என்று உங்களால் அழைக்க முடியுமா என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். உங்களுடைய அந்தக் கருத்து கணவனால் இழைக்கப்படுகின்ற பாலியல், உடல், மனரீதியான வன்முறைகளை நியாயப்படுத்துவது மட்டுமல்லாமல், எந்தவொரு சட்டபூர்வமான உதவியும் இல்லாமல் பல ஆண்டுகளாக திருமணங்களுக்குள் இந்திய பெண்கள் எதிர்கொண்டு வருகின்ற சித்திரவதைகளை இயல்பானதாக்கி காட்டுகிறது.

மோஹித் சுபாஷ் சவனுக்கு ஜாமீன் வழங்கிய அமர்வு நீதிமன்ற உத்தரவு மிகவும் 'கொடூரமானது' என்று கூறிய பம்பாய் உயர்நீதிமன்றம், அதுமட்டுமல்லாமல் 'இதுபோன்ற மிகமுக்கியமான விஷயங்களில் கற்றறிந்த நீதிபதியின் இதுபோன்ற அணுகுமுறை முற்றிலும் சுரணையற்றவராக அவர் இருப்பதையே தெளிவாகக் காட்டுகிறது' என்று குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த அந்தக் கருத்து உங்களுடைய கருத்துக்களுக்கும் மிக அதிக அளவில் பொருந்திப் போவதாகவே இருக்கின்றது. மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கைத் தீர்த்து வைக்கின்ற வகையில் இணக்கமான தீர்வாக நீங்கள் வைத்திருக்கும் அந்த திருமண முன்மொழிவு அந்த நீதிபதி இழைத்த  கொடூரத்தை விட மிகவும் மோசமாக சுரணையற்று இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நீதியைப் பெறுவதற்கான உரிமையை அது மிக மோசமாகப் பாதிக்கின்றது. 

பாலியல் பலாத்காரத்திற்கான சமரசத் தீர்வுகளை முன்வைக்கின்ற உங்களைப் போன்ற அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆணாதிக்க மனப்பான்மையை இந்தியப் பெண்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர். தப்பிப்பிழைத்தவர் அல்லது அவரது உறவினர் எவ்வாறு தற்கொலை செய்து கொண்டனர் அல்லது பலாத்காரம் செய்தவருடனான தீர்வை எதிர்த்ததற்காக அவர்கள் எவ்வாறு கொலை செய்யப்பட்டனர் என்கின்ற வகையிலே இந்த சமரசம் என்பதற்கான நடைமுறை விளக்கம் பல தீர்ப்புகளால் வீடுகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது,

உங்களுக்கு முன்பு இந்தப் பதவியில் இருந்தவர் தனக்கு எதிராகத் தொடரப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக தானே அந்த வழக்கில் அமர்ந்து, புகார்தாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உச்சநீதிமன்ற அமர்வில்  இருந்து தவறான, அவதூறான தாக்குதல்களை நடத்தியதற்கு நாங்கள் சட்சிகளாக இருந்திருக்கின்றோம். ஒரு பெண் ‘மிக மெதுவாக இல்லை என்று சொல்வதற்கு ஆமாம் என்ற பொருளே இருக்கின்றது என்ற அடிப்படையில் பாலியல் பலாத்கார குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியை விடுவிப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீடு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் பெண் விவசாயிகள் ஏன் ‘இருக்கிறார்கள்’ என்று நீங்கள் ஏற்கனவே  கேட்டிருக்கிறீர்கள்; அந்தப் பெண்களை ‘வீட்டிற்கு திருப்பி அனுப்பும்படியும்’ நீங்கள் கேட்டுக் கொண்டீர்கள். ஆண்களுக்கு இருக்கின்ற சுயாட்சி மற்றும் ஆளுமை பெண்களுக்கு இல்லை என்பதையே அது குறிப்பதாக இருந்தது. நேற்று 'ஆண், பெண் என்று இருவர் ஒன்றாக வாழும் போது, கணவர் மிருகத்தனம் நிறைந்த மனிதராக இருக்கலாம் என்றாலும், சட்டபூர்வமாகத் திருமணமாகி இருக்கின்ற ஆணுக்கும் மனைவிக்கும் இடையிலான உடலுறவை பாலியல் பலாத்காரம் என்று உங்களால் அழைக்க முடியுமா’ என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.  

போதும் இதற்கு மேல் தாங்க முடியாது. நீதிமன்றத்தை அவதூறு செய்வதாக, அதன் அதிகாரத்தை சீர்குலைப்பதாகவே உங்களுடைய வார்த்தைகள் இருக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்ற பதவியின் உயர்ந்த பீடத்திலிருந்து நீங்கள் ‘நீதி என்பது இந்தியாவில் பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமை அல்ல’ என்ற செய்தியை மற்ற நீதிமன்றங்கள், நீதிபதிகள், காவல்துறை மற்றும் பிற சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பதாகவே உங்களுடைய வார்த்தைகள் இருக்கின்றன. உங்களுடைய வார்த்தைகள் சிறுமிகளை, பெண்களை மேலும் மௌனமாக்கிடவே வழிவகுத்துக் கொடுக்கும். அவர்களுடைய மௌனத்தை உடைக்க பல ஆண்டு காலம் ஆகும். உங்களுடைய வார்த்தைகள் திருமணம் என்பது பாலியல் பலாத்காரத்திற்கான உரிமம் என்ற செய்தியையே பாலியல் பலாத்காரத்தை செய்பவர்களுக்கு அனுப்பி வைக்கிறது; அத்தகைய உரிமத்தைப் பெறுவதன் மூலம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய செயலை நியாயப்படுத்தவும் சட்டப்பூர்வமாக்கவும் முடியும்.

2021 மார்ச் 01 அன்று நீங்கள் நீதிமன்றத்தில் கூறிய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, இந்த தேசத்தின் பெண்களிடம் மன்னிப்பு கேட்கவும் வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

ஒரு கணம் தாமதமின்றி இந்திய தலைமை நீதிபதி என்ற பதவியில் இருந்து நீங்கள் விலகிடுவதே நேர்மையான செயலாக இருக்கும்.

 

https://thewire.in/law/supreme-court-rape-accused-marry-pocso-government-employee

https://thewire.in/women/cji-s-a-bobde-must-step-down-for-asking-rape-accused-to-marry-victim-open-letter

நன்றி: தி வயர் இணைய இதழ்

தமிழில்: தா.சந்திரகுரு

;