உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது அமலாக்கத்துறை எந்த விசாரணையும் நடத்தாதது ஏன்? போன்ற கேள்விகளை அடுக்கடுக்காக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு எதிராக வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "தமிழ்நாட்டை மட்டும் அமலாக்கத்துறை குறிவைப்பதாகக் கூறினார்.
மேலும், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அமலாக்கத்துறை இப்படித்தான் செயல்படுகிறதா?. அசாம் முதலமைச்சர் மீது FIR இருக்கிறது. ஆனால் ஏன் விசாரணைகள் நடத்தப்படவில்லை?
அதோடு, ஒருசில மாநிலங்களைக் குறிவைத்தே சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் செயல்படுவதாகவும் கபில் சிபல் குற்றஞ்சாட்டினார்.
லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்ட அங்கித் திவாரியின் மீதான விசாரணையை அமலாக்கத்துறை முடக்க முயற்சிப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து சிபிஐ - அமலாக்கத்துறை - மாநில அரசுகள் இடையே ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தமிழ்நாடு அரசே சட்டம் இயற்றலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றலாம் என்றும் தெரிவித்தது. அங்கித் திவாரி வழக்கு விசாரணையின் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையிடம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.