court

img

மாணவர்களை கட்டாயமாக வரச் சொல்லும் பள்ளி விபரங்களை தெரிவித்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்

உயர்நீதிமன்றம் விளக்கம் -   அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை, செப். 15-  மாணவர்களை கட்டாயமாக பள்ளிக்கு வரச் சொல்லும் பள்ளிகளின் விவரங்களை தெரிவித்தால், அந்த பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று விளக்கம் அளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல்வஹாதீன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: ‘‘தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் கொரோனா நோய் தொற்றின் 3 ஆவது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படுகிறது.  சில பள்ளிகளில் மாணவர்களை கண்டிப்பாக நேரடி வகுப்பிற்கு வரவேண்டும் என கூறுகின்றனர். மேலும் சில பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றுவது இல்லை. ஆன்லைன் வகுப்பு மூலம் சரியாக மாணவர்கள் கற்பித்தல் இல்லை என்று கருதி பெற்றோர்கள் நேரடி வகுப்பிற்கு மாணவர்களை அனுப்புகின்றனர்.

இதனால், அனைத்து மாணவர்களும் பள்ளிக்குச் செல்வதால் சமூக இடைவேளை பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளி செல்ல தடை விதிக்க வேண்டும்’’ என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், பல பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயம் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என கூறுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், கட்டாயமாக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகளின் விவரங்களை மனுதாரர் தெரிவித்தால், அந்த பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தனர்.  மேலும் வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு முதன்மை செயலர், பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;