court

img

பெகாசஸ் உளவு விவகாரம்: தொழில் நுட்ப நிபுணர் குழு அமைப்பதில் உச்சநீதிமன்றம் தீவிரம்

பெகாசஸ் உளவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தொழில் நுட்ப நிபுணர்குழுவை அமைக்கும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் மென்பொருள் மூலம் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வேவு பார்க்கப்பட்டதாக பகிரங்க குற்றச்சாட்டு எழுந்தது. இதை விசாரிக்கும் வகையில் தொழில்நுட்ப நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைக்கவுள்ளது. இதுகுறித்த உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்று தெரிவித்தார்.
மற்றொரு வழக்கின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, பெகாசஸ் மனுதாரர் சார்பு வழக்கறிஞரான சந்தர் உதய் சிங்கிடம் ரமணா இதை தெரிவித்தார். இதுகுறித்து ரமணா மேலும் கூறுகையில், "பெகாஸஸ் விவகாரத்தில் இந்த வாரமே உத்தரவு பிறப்பிக்க விரும்புகிறோம். ஆனால், தொழில்நுட்ப நிபுணர் குழுவில் நாங்கள் இடம்பெற நினைத்த வல்லுநர்கள் தனிப்பட்ட காரணங்களால் குழுவில் இடம்பெற மறுத்துவிட்டனர். எனவே, உத்தரவை பிறப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 
இதனால் தொழில்நுட்ப குழுவின் உறுப்பினர்கள் விரைவில் இறுதிசெய்யப்பட்டு அடுத்த வாரம் இதில் உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்றார். இதற்கு பதிலளித்த உதய் சிங், "பெகாசஸ் மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞரான கபில் சிபலிடம் இது தெரிவிக்கப்படும்" என்றார்.
கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பது குறித்து பிரமாண பத்திரிகை தாக்கல் செய்யப்படாது என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, தலைமை நீதிபதி என். வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹீமா கோலி ஆகியோர் கொண்ட அமர்வு, பெகாசஸ் விவகாரத்தில் இடைக்கால உத்தரவை ஒத்திவைத்தது. பெகாசஸ் விவகாரத்திற்கும் தேசிய பாதுகாப்புக்கும் தொடர் இருப்பதால் பொதுவெளியில் இதுகுறித்து விவாதிக்க முடியாது என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியது குறிப்பிடத்தக்கது. 

;