court

img

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு.... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்....

புதுதில்லி:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதா, செல்லத்தக்கதா எனக் கேள்வி எழுப்பி கேரள காங்கிரஸ் எம்.பி., டி.என்.பிரதாபன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசுபதில் அளிக்க  நோட்டீஸ் அனுப்பி உத்தர விட்டுள்ளது. 

ஏற்கெனவே வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி.. மனோஜ் ஜா, திமுக எம்.பி., திருச்சி சிவா ஆகியோர் தாக்கல்செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. இதனைத்தொடர்ந்து  மறு அறிவிப்புவரும்வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்தத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின்  திருச்சூர் மக்களவை உறுப்பினர் டிஎன் பிரதாபன், தனது வழக்கறிஞர் ஜேம்ஸ் பி.தாமஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தார்.அந்த மனுவில், “வேளாண் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அது ரத்து செய்யப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 14 சமத்துவ உரிமை, பிரிவு 15 பாகுபாடு காட்டுவதற்கு எதிரான உரிமை, பிரிவு 21 சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றுக்கு எதிராக உள்ளது. இந்திய வேளாண்மை என்பது சிறு சிறு குழுக்களாக வகைப்படுத்தப்படுகிறது. காலநிலை, உறுதியில்லாத உற்பத்தி, கணிக்க முடியாத சந்தை என நமது கட்டுப்பாட்டை மீறி பலவீனங்கள் வேளாண்மை யில் இருக்கின்றன.

பருவமழையைச் சார்ந்திருக்கும் விவசாயிகள் சந்திக்கும் சவால்களை, ஏபிஎம்சி சந்தைகளை வலுப்படுத்தாமல் வருவாயைப் பெருக்குவதன் மூலம் தீர்த்துவிட முடியாது.இதைச் சரிசெய்ய அதிகமான முதலீடு, குறைந்தபட்ச ஆதார விலையை அதிகப்படுத்த வேண்டும். 2015-16 ஆம் ஆண்டுவேளாண் புள்ளிவிவரங்களை அடிப்படை யாக வைத்து மத்திய அரசு பிரதமர் கிசான்திட்டத்தைச் செயல்படுத்துகிறது.ஆனால், தற்போது நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டும் 14.5 கோடி பேர் உள்ளனர். இந்த 14.5 கோடி பேரின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் அமைந்துள்ளதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமையன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே அமர்வு, மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

;