court

img

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்விற்கு மேலும் அவகாசம் நீட்டிப்பு....   உச்சநீதிமன்றம் உத்தரவு.....

புதுதில்லி:
தமிழகத்தில் காலியாக உள்ள 117 எம்பிபிஎஸ், 459 பிடிஎஸ் இடங்களை நிரப்பும் வகையில்  மருத்துவக் கலந்தாய்வை நடத்துவதற்கு மேலும் ஒருவார காலம்  அவகாசம்அளித்து வியாழக்கிழமையன்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ கலந்தாய்வு  நடத்திமுடிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில்  மொத்தம் 34,424 மாணவர்கள் விண்ணப்பித்தநிலையில் 3,650 மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில், மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு நவம்பர்மாதம் துவங்கி ஜனவரி 15 ஆம் தேதி வரை இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழக அரசு அறிவித்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு, பொது பிரிவினர்கள், சிறப்பு பிரிவினர் என அனைவருக்கும் திட்டமிட்டு கலந்தாய்வு நடத்தப் பட்டது. இதையடுத்து கலந்தாய்வுக்கான காலக்கெடு என்பது தற்போது முடிவடைந்து இருந்தாலும், மாநிலம் முழுவதும் பல இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் மருத்துவம் படிக்க நினைத்த மாணவர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்துவிட்டது. குறிப்பாக தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 எம்.பி.பி.எஸ் இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 112 இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரியில் 12 பிடிஎஸ் இடங்களும், சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில்447 பிடிஎஸ் இடங்களும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா, கடந்த 21 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல்செய்திருந்தார். அதில், “மருத்துவ கலந்தாய்வுக்கான காலக்கெடு தற்போது முடிந்துவிட்டாலும், தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால் அதனை சரி செய்யும் விதமாக மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க தமிழகத்திற்கு மேலும் ஒரு வாரம் காலம் அவகாசம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து மேற்கண்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் தலைமையிலான அமர்வு முன்பு வியாழக்கிழமையன்று காலை விசாரணை நடைபெற்றது.அப்போது, தமிழகத்தில் காலியாக இருக்கும் மருத்துவ இடங்களை நிரப்பும் வகையில் கலந்தாய்வை நடத்த இன்று முதல் ஒரு வாரம்அவகாசம் வழங்குவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

;