court

img

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு... ஜூன் 3க்குள் கொள்கை முடிவு எடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு....

 புதுதில்லி:
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில் ஜூன் 3 ஆம் தேதிக்குள் கொள்கை முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து எனவும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும், கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த நிலைப்பாட்டை மத்தியஅரசு இன்னும் அறிவிக்காமல் உள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் மம்தா சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லாதது. 12ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் தொடர்ந்து தாமதம் செய்வது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். ஆதலால், 12ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வர் ஆகியோர் முன்னிலையில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜரானார்.அப்போது வேணுகோபால் நீதிபதிகளிடம் கூறுகையில், “12 ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்து முடிவு எடுக்க மத்திய அரசுக்கு 2 நாட்கள் அவகாசம் தேவைப்படுகிறது. உரிய இறுதி முடிவுகளை எடுத்து ஜூன் 3ஆம் தேதிதெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.பின்னர் நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “உங்கள் கோரிக்கையின்படி ஜூன் 3 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைக்கிறோம். கடந்த ஆண்டு எடுத்த கொள்கையில் இருந்து நீங்கள் விலகினாலும் அதற்குரிய சரியான காரணத்தைக் கூற வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அதற்குரிய துறை ரீதியான அதிகாரிகளுடன் ஆலோசித்து, அனைத்து அம்சங்களையும் ஜூன் 3 ஆம் தேதி தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் 15ஆம் தேதிவரை நடக்க இருந்த சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ தேர்வுகளை ரத்து செய்ய, கடந்த ஜூன் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. மேலும், மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்களை மதிப்பிடுவது குறித்து அறிவித்த முறைக்கும் நீதிமன்றம் அனுமதியளித்தது. அதுபோன்று இந்த முறையும் சரியான காரணங்களைக் கூற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

;