court

img

பெகாசஸ் மூலம் வேவு பார்த்த விவகாரம்.... நாட்டின் குடியாட்சியின் விழுமியங்களை தாக்கக் கூடியது.... உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் குற்றச்சாட்டு....

புதுதில்லி:
இஸ்ரேலின் பெகாசஸ் வேவு மென்பொருள் மூலம் தனிநபர் ரகசியத்தை வேவு பார்ப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.இந்திய நாட்டின் குடியாட்சியின் விழுமியங்களை தாக்கக் கூடியது இந்த தொழில்நுட்பம் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் குற்றம்சாட்டினார்.

பெகாசஸ் வேவு மென்பொருள் மூலமாக இந்திய நாட்டில் உள்ள பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோரை உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்து ஆங்கில நாளிதழின் முதன்மை ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான என்.ராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 5 வியாழனன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு நடைபெற்றது. அப்போது, நாளிதழ் தகவல்கள் தவிர என்ன ஆதாரங்கள் மனுதாரர்களிடம் உள்ளன என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

செய்தித்தாள் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு வழக்கு தொடரவில்லை. அமெரிக்க நீதிமன்றத்தில் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே வழக்கு தொடரப்பட்டது என்று வழக்கறிஞர் எம்.எல்.சர்மா கூறினார்.

‘பெகாசஸ் விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது’
உளவு பார்க்கப்பட்டதாக சொல்பவர்கள் யாரும் இதுவரை ஏன் புகார் அளிக்கவில்லை?. 2019 முதல் ஒட்டுக்கேட்பு விவகாரம் வெளிவந்ததாக கூறப்படும்போது தற்போது அவசரமாக கையாளுவது ஏன் ?பெரும்பாலும் பத்திரிகை  செய்திகளின் அடிப்படையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பத்திரிகை செய்திகளின் தன்மையை ஆராய்ந்த பிறகே விசாரணைக்குள் செல்ல முடியும். பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில்,  பெகாசஸ் வேவு மென்பொருள் நமக்கு தெரியாமலேயே நமது வாழ்க்கையில் நுழைந்து விடக்கூடிய மோசமான தொழில்நுட்பம்.நமது ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கக்கூடியது பெகாசஸ் மென்பொருள். தனிமனித கவுரவம், ரகசிய தன்மை, நமது குடியாட்சியின் விழுமியங்களை தாக்கக் கூடியது இந்த தொழில்நுட்பம். தொழில்நுட்பம் மூலம் தனிநபர் ரகசியத்தை வேவு பார்ப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.என்எஸ்ஓ நிறுவனம் உளவு பார்க்கக் கூடிய தகவல்களை ஒரு நாட்டின் அரசுகளுக்கு மட்டுமே வழங்கும்.பெகாசஸ் தொழில்நுட்பம் கேடு விளைவிக்கக் கூடியது. சட்டவிரோதமானது. 2019 முதல் உளவு பார்க்கப்பட்டாலும் அதுகுறித்த விவரம் தற்போது தான் வெளியாகியுள்ளது.அதனால் தான் இத்தனை நாட்களாக யாரும் புகார் எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர் என்று கூறினார்.

;