cinema

img

வெடிகுண்டு பார்சல்: 10 வருடத்திற்குப் பிறகு குற்றவாளி கைது

சென்னை:
விஜய் தொலைக்காட்சிக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பிய வழக்கில் பத்து வருடமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விஜய் டிவியின் லொள்ளு சபா, தொலைக்காட்சி தொடர், திரைப்படங்களில் துணை வேடங்களில் நடிப்பவர் சாமிநாதன். இவர் கே.கே. நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு, கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் மயிலாடுதுறை தாலுகா, திருவாவடுதுறையைச் சேர்ந்த கே.சித்தார்த் என்பவரிடமிருந்து பார்சல் ஒன்று வந்தது. அதனை வாங்கிய சாமிநாதன், பார்சலை பிரித்துள்ளார்.

அதில், பிளாஸ்டிக் டப்பாவில் விபூதி பொட்டலத்துடன் வாண வேடிக்கைக்கு பயன்படுத்தும் பத்து நாட்டு வெடிகுண்டுகளின் திரிகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டு, எலக்ட்ரானிக் போர்டுடன் இணைக்கப்பட்டிருந்தது. மேலும், டப்பாவிற்கு கீழே ஒட்டப் பட்டிருந்த பேப்பரில், ‘இன்று உனக்கு மரணம் உறுதி எனக்கு வெற்றி நிச்சயம்’ என எழுதப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சாமிநாதன் கே.கே.நகர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.இதேபோன்று ஒரு பார்சல் நுங்கம் பாக்கத்திலுள்ள விஜய் தொலைக்காட்சி அலுவலகத்திற்கும், லொள்ளு சபா நிகழ்ச்சியின் இயக்குநர் ராம்பாலா என்பவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த காவல் துறையினர், திருவிடைமருதூர் நரசிங்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் தனது கதையை திருடி லொள்ளு சபா நிகழ்ச்சியை எடுத்ததாகவும் அதனால் ஆத்திரத்தில் வெடிகுண்டு பார் சல் அனுப்பியதையும் தெரிவித்தார். இதனையடுத்து அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.இதையடுத்து, கௌதம் பிணையில் வெளிவந்து, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனையடுத்து அவருக்குப் பிணையில் வெளி வரமுடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்து சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

;