அதானி குழுமத்திற்கு அதிக கடன் சுமை உள்ளதாக நிதியியல் பகுப்பாய்வு நிறுவனமான கிரெடிட்சைட்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும், உலகின் 4வது பெரிய பணக்காரர் ஆகவும் இருக்கும் அதானி, விமான நிலையம், துறைமுகம், தொலைத்தொடர்பு, ஊடகம், மின்சாரம் எனப் பல துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், பின்ச் குரூப் கிளை நிறுவனமான கிரெடிட்சைட்ஸ் நிறுவனம் அதானி குழுமம் குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதில், அதானி குழுமத்திற்கு அதிக கடன் சுமை உள்ளதாகவும், 90 சதவீத வர்த்தக விரிவாக்கம் மற்றும் முதலீட்டுப் பணம் கடன் வாயிலாக வந்தது என்பதால் அதானி குழுமத்தின் கடன் அளவீடுகள் மற்றும் பணப்புழக்கத்தின் மீது அதிகப்படியான அழுத்தத்தை உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலையை தொடர்ந்தாலோ அல்லது மோசமான வர்த்தக நிலைக்குத் தள்ளப்பட்டாலோ அதானி குழுமம் கழுத்து வரையில் கடன்களை வைத்திருக்கும் காரணத்தால் மோசமான கடன் வலைக்குள் தள்ளப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கிரெடிட்சைட்ஸ் தெரிவித்துள்ளது.